மாவட்டம் முழுவதும் இரண்டு நாட்களில் 15,075 தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி: கலெக்டர் கவிதா தகவல்

திருவள்ளூர், ஜூலை 29: திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 25, 27 ஆகிய தேதிகளில் 15,075 தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கலெக்டர் கவிதா தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட கலெக்டர் கவிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சி, 6 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளிலும் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் ரேபீஸ் தடுப்பூசி போடும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

மேலும், கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 5 நாட்களுக்கு பராமரிப்பு செய்த பின்னர், நாய்கள் பிடிக்கப்பட்ட இடத்திலேயே விடுவிப்பு செய்யப்படுகிறது. மேலும், தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி போடப்படும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 25.7.2026 மற்றும் 26.7.2026 தேதிகளில் பல்வேறு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 11,575 தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

6,458 தெரு நாய்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 14 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 526 ஊராட்சிகளிலும் 4 ஏபிசி மையங்கள் சார்பில் 77 தேர்ந்தெடுக்கப்பட்ட நாய் பிடிப்பவர்களைக் கொண்டு 150க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, 3500க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இப்பணி தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Related Stories: