பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வலியுறுத்தி அதிமுக திண்டுக்கல் மேற்கு மாவட்டம் சார்பில் பழநியில் மயில் ரவுண்டானா முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை வகித்து பேசியதாவது: தூய ஆட்சி தருவோம். லஞ்சம் வாங்க மாட்டோம். வாங்கினாலும் விடமாட்டோம் என்று சொல்லுகிறார் முதல்வர் விஜய்.
ஆனால், இந்த விஷயத்தில் அவர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? உங்கள் ஆட்சியில் தான் இந்த பத்திரப்பதிவு நடந்துள்ளது. அறநிலையத்துறை அமைச்சருக்கு இதைப்பற்றி தெரியாது என கூறுவது வேடிக்கை. இந்த பத்திரப்பதிவு செய்வதற்காகவே சார்பதிவாளரை வேறு இடத்தில் இருந்து வரவைத்துள்ளனர். ஒரு நாள் கூத்தாக பழநி சார்பதிவாளர் ஆபீசிற்கு வர வைத்துள்ளனர். நிச்சயம் அமைச்சருக்கு தெரியாமல் எதுவும் நடக்காது. இதை கண்டிக்க வேண்டிய அறநிலையத்துறை அமைச்சர் இதைப்பற்றி வாயை திறக்கவில்லை.
இந்த புகாரை உடனடியாக சிபிசிஐடி விசாரிக்கிறது என்கின்றனர். சிபிசிஐடி அமெரிக்காவில் இருந்தா வந்துள்ளனர்? முதலமைச்சர் என்ன உத்தரவிடுகிறாரோ அதைத்தான் செய்வார்கள். நிலத்தை ரூ.2 கோடிக்கு விலைக்கு வாங்கியவர்கள் இன்னும் விசாரணை வளையத்திற்குள் வரவில்லை. சிபிசிஐடி விசாரணையே ஒரு ஏமாற்று வேலை. எடப்பாடி பழனிசாமி கேட்பது போல இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும். அப்போதுதான் இப்பிரச்னையில் யாருடைய தலையீடும் இல்லாமல் விசாரணை நடைபெறும். இவ்வாறு அவர் பேசினார்.
* பேரன், பேத்தி பேச்சை கேட்டு ஓட்டு போட்டு படாதபாடுபடும் மக்கள்
திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ‘‘ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை தருகிறேன் என்று சொன்னார்கள். 3 மாதங்கள் ஆகியும், இதுவரை தரவில்லை. மேகதாது அணை தொடர்பாக கர்நாடகா சென்று முதல்வர் சிவக்குமாரை போய் பார்க்கிறேன் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். ஆனால், யார் வந்து கேட்டாலும் தண்ணீர் தர முடியாது என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. நீதிமன்றம் மூலமே நியாயம் கிடைக்கும். இன்று அரிசி விலையும் ஏறி உள்ளது. பேரன், பேத்தி பேச்சை கேட்டு ஓட்டு போட்டுள்ள மக்கள் படாத பாடுபடுகின்றனர். அனைத்து விலைவாசிகளும் உயர்ந்துள்ளது’’ என்றார்.
