புதுடெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து, தேசியத் தேர்வுகள் முகமையை சீரமைக்கும் வகையில் 47 அதிகாரிகளை ஒன்றிய அரசு பணிநீக்கம் செய்த நிலையில், இஸ்ரோ முன்னாள் தலைவர் தலைமையில் புதிய கண்காணிப்பு குழு செயல்படும். இதன்மூலம் நீட் முறைகேட்டை மூடி மறைக்க அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த மே 3ம் தேதி நடைபெற்ற மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் வினாத்தாள் கசிந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, மே 3ம் தேதி நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்பட்டு, சுமார் 20 லட்சம் மாணவர்கள் கடந்த ஜூன் 21ம் தேதி மீண்டும் தேர்வு எழுத வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.
இந்தத் தேர்வு முறைகேடு தொடர்பாக தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், தேசியத் தேர்வுகள் முகமையின் (என்.டி.ஏ) தோல்விகளுக்குப் பொறுப்பேற்கும் வகையில், தவறிழைத்த அதிகாரிகள் மீது துறைரீதியான மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, தேசியத் தேர்வுகள் முகமையில் பணியாற்றி வந்த 47 அதிகாரிகளை பணிநீக்கம் செய்து ஒன்றிய அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. அவர்களை வெறும் இடமாற்றம் செய்யாமல் முற்றிலும் பணிநீக்கம் செய்துள்ள ஒன்றிய அரசு, குற்றச் செயல்களில் தொடர்புடையவர்கள் மீது சி.பி.ஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து அமைப்பை மறுசீரமைக்கும் முதல் கட்டமாக, 4 பொது மேலாளர்கள் மற்றும் யு.பி.எஸ்.சி-யின் பிரதிபா சேது தளம் மூலமாக 16 இளம் வல்லுநர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையிலான கண்காணிப்புக் குழுவின் மேற்பார்வையில் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. சைபர் பாதுகாப்பு, தடயவியல் விசாரணை, 500க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள தேர்வு மைய நிர்வாகம் மற்றும் மதிப்பீட்டு ஆராய்ச்சி ஆகிய 4 முக்கியப் பிரிவுகளுக்கு 3 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பொது மேலாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். தற்போது அங்கீகரிக்கப்பட்ட 39 நிரந்தரப் பணியிடங்களில் 24 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ள சூழலில், 73 ஒப்பந்தப் பணியாளர்கள் மற்றும் 124 வெளிமுகமை ஊழியர்களை மட்டுமே நம்பியிருக்கும் நிலையை மாற்றி, தற்காலிக ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.
மேலும், தேர்வுப் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் வரும் 2027ம் ஆண்டு முதல் நீட் தேர்வை ஓ.எம்.ஆர் தாள் முறைக்கு பதிலாக கம்ப்யூட்டர் வழியிலான தேர்வாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. நீட் தேர்வில் நடந்த வினாத்தாள் கசிவு முறைகேட்டை முற்றிலும் மறுத்து வந்த ஒன்றிய அரசு, நாடு முழுவதும் மாணவர்கள் வீதியில் இறங்கி நடத்திய தொடர் போராட்டங்கள், டெல்லி ஜந்தர் மந்தர் முற்றுகை மற்றும் எதிர்க்கட்சிகளின் கடும் நெருக்கடி காரணமாகவே வேறு வழியின்றி பணிந்தது. மாணவர்களின் கொந்தளிப்பு அடங்காத நிலையிலும், ஒன்றிய கல்வி அமைச்சரின் ராஜினாமா கோரிக்கை தீவிரமடைந்த சூழலிலும், உயர்மட்ட அரசியல்வாதிகளைக் காப்பாற்றவே தற்போது 47 அதிகாரிகளை ஒன்றிய அரசு அவசர அவசரமாகப் பணிநீக்கம் செய்து நாடகமாடி வருகிறது.
முறைகேட்டின் பின்னணியில் உள்ள முக்கியப் புள்ளிகளைக் கைது செய்யாமல், கீழ்மட்ட அதிகாரிகளை மட்டும் பணிநீக்கம் செய்து பழியை அவர்கள் மீது தூக்கிப்போட ஒன்றிய அரசு முயல்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், யு.பி.எஸ்.சி தளம் மூலம் புதிய வல்லுநர்களை நியமிப்பதாகவும், இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைப்பதாகவும் அறிவித்திருப்பது, தன் மீதான மக்கள் கோபத்தைத் திசைதிருப்ப ஒன்றிய அரசு நடத்தும் கண் துடைப்பு நாடகமே ஆகும். தேசியத் தேர்வுகள் முகமையில் அங்கீகரிக்கப்பட்ட 39 நிரந்தரப் பணியிடங்களில் 24 பணியிடங்களை மட்டுமே நிரப்பிவிட்டு, 73 ஒப்பந்தப் பணியாளர்கள் மற்றும் 124 வெளிமுகமை ஊழியர்களை வைத்து நாட்டின் மிகமுக்கியமான நுழைவுத் தேர்வை அரைகுறையாக நடத்திய ஒன்றிய அரசின் அலட்சியப்போக்கே இந்த இமாலய ஊழலுக்கு முதன்மைக் காரணமாகும்.
மாணவர் போராட்டங்கள் மூலமாக ஒன்றிய அரசின் சாயம் வெளுத்த பின்னரே, வரும் 2027ம் ஆண்டு முதல் கம்ப்யூட்டர் வழியிலான தேர்வாக மாற்றப் போவதாக அறிவித்துள்ளனர். பல லட்சம் மாணவர்களின் வாழ்க்கை பாழான பிறகே விழித்துக் கொண்ட ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைகள், மாணவர்களின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியே தவிர, ஒன்றிய அரசின் சொந்த விருப்பமல்ல என்பது தெளிவாக அம்பலமாகியுள்ளது. முறைகேட்டின் பின்னணியில் உள்ள முக்கியப் புள்ளிகளைக் கைது செய்யாமல், கீழ்மட்ட அதிகாரிகளை மட்டும் பணிநீக்கம் செய்து பழியை அவர்கள் மீது தூக்கிப்போட ஒன்றிய அரசு முயல்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
