புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக் கோரி கடந்த 20ம் தேதி ‘சன்சத் சலோ’ என்ற பெயரில் பேரணி நடத்திய மாணவர்கள் மீது டெல்லி போலீசார் மற்றும் விரைவு அதிரடிப் படையினர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல் தொடர்பாக ஓய்வுபெற்ற டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, முன்னாள் வெளியுறவுச் செயலாளர் சிவ்ஷங்கர் மேனன், முன்னாள் பஞ்சாப் டிஜிபி ஜூலியோ ரிபெய்ரோ உள்ளிட்ட 93 ஓய்வுபெற்ற சிவில் சர்வீஸ் அதிகாரிகள் கூட்டாக இணைந்து பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா மற்றும் டெல்லி போலீஸ் கமிஷனர் எஸ்.பி.கே.சிங் ஆகியோருக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.
அதில், ஆயுதம் ஏந்தாத மாணவர்கள் மீது பெல்ட் குண்டுகள், மின்சார லத்திகள், ஆணி பதிக்கப்பட்ட தடி மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி போலீசார் கொடூரமாகத் தாக்கியதில் 15 வயது சிறுவன் உட்படப் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர் ஒருவரின் கண் மற்றும் கழுத்துப் பகுதியில் பாய்ந்த பெல்ட் குண்டுகளை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களது எதிர்காலம் மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவே குரல் கொடுத்தனர். இத்தாக்குதல் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும், அத்துமீறிய அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளனர்.
