ஊட்டி, ஜூலை 24: ஊட்டி தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனுக்காக 4 லட்சம் மலர் நாற்றுக்கள் உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது. சுற்றுலா நகரமான ஊட்டிக்கு முதல் மற்றும் இரண்டாவது சீசனின்போது அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முதல் சீசன் அனுசரிக்கப்படும் நிலையில் அப்போது பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
இதனால், அப்போது வரும் சுற்றுலா பயணி மகிழ்விக்கும் வகையில் மலர் கண்காட்சி தாவரவியல் பூங்காவில் நடத்தப்படுகிறது.
இந்த மலர் கண்காட்சியை பல லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துச் செல்வது வழக்கம்.இந்த ஆண்டு மே மாதம் நடந்த மலர்கள் கண்காட்சியை ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர். முதல் சீசன் முடிந்த நிலையில் தற்போது இரண்டாவது சீசன் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அனுசரிக்கப்பட உள்ளது.
