காந்தல் ரோகினி பகுதியில் உள்ள பராமரிப்பில்லாத சுகாதார வளாகம்

ஊட்டி, ஜூலை 23: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட காந்தல் ரோகினி பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பல்வேறு வார்டுகளிலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள் அமைக்கப்பட்டது. இந்த சுகாதார வளாகங்கள் அமைக்கப்பட்டு ஒரு சில மாதங்கள் மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். அதன்பின் முறையாக பராமரிக்காததாலும், தண்ணீர் போன்ற அடிப்படை தேவைகள் இல்லாத நிலையிலும், இவை பயனின்றி கிடக்கின்றன. இவை சமூக விரோதிகளின் கூடாரமாகவும் உள்ளன.

இந்த சுகாதார வளாகங்களை சுற்றிலும் பொதுமக்கள் குப்பைகள் கொட்டுவது, பொது கழிப்பிடமாக பயன்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. காந்தல் ரோகினி பகுதியிலும் இதுபோன்று ஒரு சுகாதார வளாகம் பயனின்றி சுகாதாரமற்ற முறையில் உள்ளது. இதனை நகராட்சி நிர்வாகம் சீரமைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: