திருப்பூர்: ஐகோர்ட் வழக்கறிஞர் முருகானந்தம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், நேரடி சாட்சிகளை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டிகொடுத்து கேரள கூலிப்படைக்கு பணம் கொடுத்த பள்ளி தாளாளர் மனைவி, ரெடிமேட் ஆடை உற்பத்தி நிறுவனம் நடத்திவரும் அவரது சம்பந்தி ஆகியோர் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியும், சென்னை ஐகோர்ட் வழக்கறிஞருமான எல்.முருகானந்தம் (41), சொத்து தகராறு தொடர்பாக முன்விரோதத்தில் கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி பிற்பகல் 2 மணியளவில் 5 பேர் கொண்ட கூலிப்படையினரால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக பள்ளி தாளாளர் தண்டபாணி, அவரது உறவினர் நாட்டுத்துரை, கூலிப்படையை சேர்ந்த தட்சிணாமூர்த்தி, நாகராஜன், சுந்தரன், ராம்குமார் உள்ளிட்ட 6 பேர் தாராபுரம் டிஎஸ்பி அலுவலகத்தில் சரணடைந்தனர். பின்னர் திருச்செங்கோட்டைச் சேர்ந்த பாலமுருகன், சதீஷ்குமார் உள்ளிட்ட மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கொலை சம்பவத்தை நேரில் பார்த்த முதல் சாட்சியாக இருந்த கடலை ரைஸ்மில் அதிபர் தங்கவேல், கடந்த 7ம் தேதி கேரள கூலிப்படையினரால் வெட்டப்பட்டார். அதில் அவர் உயிர் பிழைத்து, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த தாக்குதலுக்கு திட்டம் தீட்டி, கூலிப்படைக்கு பணம் கொடுத்து, சாட்சிகளை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக தேன்மலர் பள்ளி தாளாளர் தண்டபாணியின் மனைவி சரஸ்வதி (50), அவரது மகன் கார்த்தியின் மாமியாரும், சேலத்தில் ஆடை உற்பத்தி தொழில் நடத்தி வருபவருமான ஹேமா (50) ஆகிய இருவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், இவர்கள் இருவரையும் போலீசார் நேற்றிரவு கைது செய்து, தாராபுரம் குற்றவியல் நீதிபதி உமாமகேஸ்வரி முன்னிலையில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். ஏற்கனவே ஐகோர்ட் வழக்கறிஞர் முருகானந்தம் கொலை வழக்கில் 26 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது கைதானவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
