×

தகாத உறவை கண்டித்ததால் கணவனை வெட்டிக் கொன்றேன்: காதலனுடன் கைதான மனைவி பரபரப்பு வாக்குமூலம்

திருமலை: மலையில் உள்ள கோயிலுக்கு சென்றபோது வாலிபர் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். இருவரும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த தேவதாசனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்(35). இவரது மனைவி ஹாசினி (30). இவர்களுக்கு 2024ம் ஆண்டு திருமணம் நடந்தது. மவுனிகா (2) என்ற மகள் உள்ளார். ரமேஷ் ஓசூரில் குடும்பத்துடன் தங்கி அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.இந்நிலையில் கடந்த 13ம்தேதி ஹாசினியின் தாய் வீடான ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் போயனப்பள்ளிக்கு 3பேரும் வந்தனர். மறுநாள் 3பேரும் மல்லப்பக்கொண்டா மலை மீதுள்ள மல்லேஸ்வர சுவாமி கோயிலுக்கு பைக்கில் ெசன்றனர். அப்போது ஆனால் 3பேரும் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதுதொடர்பான புகாரின்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் மல்லப்பக்கொண்டா மலையில் கைக்கால்கள் கட்டிய நிலையில் ரமேஷ் வெட்டி கொல்லப்பட்டதும் ஹாசினியே தனது கள்ளக்காதலன் கங்காதர் என்பவருடன் சேர்ந்து கொலை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், வனப்பகுதியில் பதுங்கியிருந்த ஹாசினி, கங்காதர் உள்பட 6 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது ஹாசினி, கங்காதர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:

ஹாசினியும், போயனப்பள்ளியை சேர்ந்த கங்காதர் என்பவரும் பள்ளியில் படிக்கும்போதே நண்பர்கள். இருவரும் காதலித்துள்ளனர். இவர்களது காதலை ஏற்க மறுத்த பெற்றோர், ஹாசினிக்கு ரமேஷுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதையடுத்து பிரசவத்திற்காக தாய்வீட்டிற்கு வந்த ஹாசினி ஓராண்டாக அங்கேயே தங்கியிருந்தாராம். அப்போது ஹாசினிக்கும், கங்காதருக்கும் இடையே மீண்டும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். ஹாசினி, தனது கணவர் வீட்டிற்கு சென்றபின்னரும், கள்ளக்காதலனுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதையறிந்த ரமேஷ் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் தங்களது கள்ளக்காதலுக்கு ரமேஷ் தடையாக இருப்பதால் அவரை கொல்ல இருவரும் திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி கடந்த 13ம்தேதி ஹாசினி, கணவர் மற்றும் குழந்தையுடன் போயனப்பள்ளிக்கு வந்தார். மறுநாள் 3 பேரும் மல்லப்பக்கொண்டா மலை மீதுள்ள மல்லேஸ்வர சுவாமி கோயிலுக்கு பைக்கில் சென்றனர். மலைப்பாதை 3வது வளைவில் சென்றபோது ஹாசினி செல்போன் மூலம் கங்காதருக்கு லைவ் லோகேஷன் அனுப்பியுள்ளார். அதை பயன்படுத்தி கங்காதர் மற்றும் அவரது நண்பர்கள் ரமேஷை வழிமறித்து சரமாரி தாக்கியுள்ளனர். பின்னர் அவரை, வனப்பகுதிக்குள் இழுத்து சென்று கை, கால்களை கட்டிபோட்டு கத்தியால் வெட்டி கொன்றுவிட்டு அனைவரும் தப்பி சென்றனர். ஹாசினியும், அவரது குழந்தையுடன் கங்காதருடன் சென்றுள்ளார்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து கங்காதர், ஹாசினி, கங்காதரின் நண்பர்களான பவன், சேகர், சந்தோஷ், சுரேந்திரா ஆகிய 6 பேரை போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சாம்சன், சிவா ஆகியோரை தேடி வருகின்றனர்.

Tags : Ramesh ,Devadasanapalli village ,Chulagiri ,Krishnagiri district ,Hasina ,
× RELATED +2 தேர்வு தோல்விக்காகத் திட்டிய தாயை கொடூரமாக கொலை செய்த மகன்!