நன்றி குங்குமம் தோழி
ஒவ்வொரு மதத்திற்கும் பிரத்யேக பாரம்பரிய உடைகள் உள்ளன. மற்ற மதம் சார்ந்த ஆடைகளை விட இஸ்லாமிய பெண்களின் பாரம்பரிய ஆடைகள் தனித்துவமானவை. இஸ்லாமிய ஆடைகளான அபாயா, ஹிஜாப், புர்கா மிகவும் சிறப்பு வாய்ந்தவையாக சொல்லப்படுகின்றன. இஸ்லாமிய மார்க்கத்தில் பெண்கள் ஹிஜாப் அணிவது என்பது அவர்களின் அடக்கம், கண்ணியம் மற்றும் இறை நம்பிக்கையை குறிக்கும் ஒரு முக்கிய அடையாளமாக கருதப்படுகிறது.
இது பெண்களுக்கு பாதுகாப்பை வழங்குவதோடு, பெண்களை பொருட்களாகப் பார்க்கும் சமூகப் பார்வையைத் தடுத்து, அவர்களின் அறிவு மற்றும் தகுதியின் அடிப்படையில் மதிக்கப்படுவதையும் உறுதி செய்கிறது. ஹிஜாப் அணிவதற்குப் பின்னால் பல முக்கியக் காரணங்கள் உள்ளன என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஃபரிதா மசூத் அகமது. அவர் ‘ஹூதா பொட்டிக்’ என்ற பெயரில் இஸ்லாமிய பெண்களுக்கான பாரம்பரிய உடைகளை விற்பனை செய்து வருகிறார்.
‘‘நான் வடசென்னை பொண்ணு. அரசுக் கல்லூரியில் இளங்கலை கணிதம் படிச்சேன். படிப்பிற்கு பிறகு மூன்றாண்டுகள் ஆசிரியராக வேலை பார்த்தேன். கணவர் ஐடி ஊழியர். திருமணம், குழந்தைகளுக்குப் பிறகு வெளியில் சென்று வேலை பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. கொரோனா காலக்கட்டத்தில் சமூக வலைத்தளங்கள் பிரபலமாயின. பலரும் தங்களின் ஆன்லைன் பிசினஸை ஆரம்பித்த காலக்கட்டம். நான் ஆடை விற்பனை சம்பந்தமான வீடியோக்கள், ரீல்ஸ்களை ஆர்வமுடன் பார்த்து வந்தேன். எனக்கும் ஈ-காமர்ஸ் பிசினஸ் செய்ய விருப்பம் வந்தது’’ என்றவர் அதற்கான தனிப்பட்ட பயிற்சியினை மேற்கொண்டுள்ளார்.
‘‘யூ டியூப்பில் ஈ-காமர்ஸ் சம்பந்தமான குறிப்பிட்ட ஒரு சேனலை பார்த்தேன். அவர்கள் ஈ-காமர்ஸ் பயிற்சியும் தருவதால், அதில் சேர்ந்தேன். அதன் மூலம் ஆன்லைன் விற்பனையின் அடிப்படை மற்றும் நுணுக்கங்கள் பற்றி தெரிந்து கொண்டேன். ஈ-காமர்ஸ் யூடியூப் சேனலில் பயிற்சி மேற்கொள்ளும் போது நமக்கான தனிப்பட்ட IDயினை அமைத்து தருவார்கள். அதனை நாம் வாழ்நாள் முழுதும் பயன்படுத்திக் கொள்ளலாம். முழுமையாக பயிற்சி முடித்த பிறகு ஆடை சம்பந்தமான பிசினஸ் செய்ய விரும்பினேன். ஆனால், பலரும் அந்தத் தொழிலில் இருப்பதால், அவர்களை விட மாறுபட்டு இருக்க நினைத்தேன்.
அந்த சமயத்தில்தான் என் மதம் சார்ந்த உடைகளை விற்பனை செய்தால் என்ன என்று தோன்றியது. எங்கள் வீட்டில் பாரம்பரிய ஆடைகளின் முக்கியத்துவத்தைப் பற்றி கூறியதை கேட்டுதான் நான் வளர்ந்தேன். இன்றைய இளம் தலைமுறையினர் பாரம்பரிய உடைகளை சரிவர அணிவதில்லை. சிலர் அதனை அணியவே விரும்புவதில்லை. அந்த ஆடைகளுக்கு என ஒரு புனிதம் உள்ளது. பெற்றோர் அதனை குழந்தைகளுக்கு சொல்லி புரிய வைக்க வேண்டும்’’ என்றவர், தன் வீட்டிலேயே சிறிய பொட்டிக் அமைத்து விற்பனை செய்து வருகிறார்.
‘‘எனக்கு சிறு குழந்தைகள் இருப்பதால் தனியாக கடை அமைக்க முடியவில்லை. அதனால் வீட்டிலேயே சிறிய முதலீட்டில் பொட்டிக் வைத்திருக்கிறேன். பாரம்பரிய ஆடைகளான அபாயா, ஹிஜாப், பர்தா, நிகாப், புர்கா, முகக்கவசம், கையுறைகள், தலைக்கு அணியும் ஆடை, உடைகளுக்கு தேவையான பின்கள் என அனைத்தும் இங்கு கிடைக்கும். பலவகை டிசைன்கள் மற்றும் துணிகளிலும் உள்ளன. மேலும், அவை அணிவதற்கு தேவையான டிசைனர் பின்களும் விற்பனைக்கு உள்ளன. தயாரிப்பாளர்களிடமிருந்து நேரடியாக வாங்கி விற்பனை செய்கிறேன்.
இங்கு நேரடியாகவும் வந்து வாங்கலாம். சமூகவலைத்தளங்களிலும் என்னுடைய உடைகள் விற்பனைக்கு உள்ளன. சிறு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான உடைகள் பல சைஸ்களிலும் உள்ளன. அம்மா, மகள் காம்போ உடைகளும் இங்கு கிடைக்கும். நான் ஆடை மற்றும் டிசைன்களை தேர்வு செய்வேன். அதனை வாங்குவது மற்றும் விற்பனை செய்வது, பேக்கிங் போன்ற வேலையினை என் கணவர் பார்த்துக் கொள்கிறார். விரைவில் மற்ற உடைகள் மற்றும் திருமண ஆடைகளும் தைத்து தரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.
‘‘ஆன்லைன் விற்பனையை பொறுத்தவரை ஒரு தடவை லிஸ்டிங் கிரியேட் செய்து, ஸ்டாக் மட்டும் வைத்திருந்தால் போதும். அவ்வப்போது புதுப்புது கலர் மற்றும் டிசைன்களை இணையத்தில் அப்டேட் செய்ய வேண்டும். சரியான நேரத்தில் டெலிவரி செய்வது மிகவும் முக்கியம். இன்ஸ்டாகிராமை பொறுத்தவரை வீடியோக்களுக்கு மட்டுமே அதிக வரவேற்பு இருக்கும். மற்ற தளங்களில் போட்டோக்களே போதுமானது. வெப்சைட் ஆரம்பிக்கும் எண்ணத்தால் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கும் கற்று வருகிறேன். இன்று இல்லத்தரசிகள் அனைவர் கையிலும் செல்போன் உள்ளன. அதில் ரீல்ஸ்களை மட்டும் பார்த்து பொழுதை போக்காமல் ஆக்கப்பூர்வமான வீடியோக்களை பார்ப்பதன் மூலம் உங்களுக்கான ஒரு தொழில் அமைத்துக் கொள்ள முடியும். அதற்கு முயற்சி மட்டுமே தேவை’’ என்கிறார் ஃபரிதா.
‘‘இஸ்லாமிய வேதமான குர்ஆனின்படி, பெண்கள் தங்கள் அழகை மறைத்து அடக்கமான ஆடையை அணிய வேண்டும் என்பது இறைவனின் கட்டளை. ஹிஜாப் பெண்களின் கண்ணியத்தைக் காக்கிறது. மேலும், இது அவர்களை தேவையற்ற பார்வைகளில் இருந்தும், பொது இடங்களில் நிகழக்கூடிய பாலியல் தொந்தரவுகளில் இருந்தும் பாதுகாக்கும் ஒரு கவசமாகச் செயல்படுகிறது. பிறரின் கவனத்தை ஈர்க்காமல், தங்களின் சுயமரியாதையையும் தனித்துவமான அடையாளத்தையும் காக்க பெண்களுக்கு உதவுகிறது. இது மதக் கடமை மட்டுமல்ல, சுதந்திரத்தின் அடையாளமாகவும் விளங்குகிறது.
ஒரு பெண்ணின் உடல்அமைப்பைக் காட்டிலும், அவளுடைய திறமை மற்றும் ஆளுமைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதை ஹிஜாப் வலியுறுத்துகிறது. எங்கள் மதத்தில் இறந்ததற்கு பிறகான மறுமை உலகம் உள்ளது என்று நாங்க நம்புகிறோம். இந்தப் பிறப்பில் செய்த எல்லாவற்றுக்கும் பயன் அந்த மறுமை வாழ்வில் கிடைக்கும் என்று எங்கள் பெரியவர்கள் சொல்வார்கள். அதைத்தான் நான் என் பிள்ளைகளுக்கும் போதிக்கிறேன்’’ என்கிறார் இளம் தொழிற்முனைவோரான ஃபரிதா அகமது.
தொகுப்பு: கலைச்செல்வி
