ஜீரோ வேஸ்ட் வெட்டிங் பிளான் பண்ணுங்க!

நன்றி குங்குமம் தோழி

திருமணங்கள் என்றாலே கொண்டாட்டம், கோலாகலம் என்பதற்கு மத்தியில், டன் கணக்கில் சேரும் குப்பைகளும் மீதமாகி வீணாகும் உணவுப் பொருட்களுமே பல நேரங்களில் மிஞ்சுகின்றன. இந்த நிலைமையை மாற்ற விரும்பி ஒரு விழிப்புணர்வு முயற்சியாக தனது திருமணத்தை சஸ்டெயினபிள் வெட்டிங் முறையில் சிறப்பாக நடத்தியுள்ளார் உமா ராம். கடந்தாண்டு நடைபெற்ற தனது திருமணத்தில் எதையும் வீணாக்காமல் குப்பைகளை மேலாண்மை செய்தும் உணவுப் பொருட்களை பயனுள்ள வகையில் தேவையுள்ள இடங்களில் கொண்டு சேர்த்தும் அசத்தியுள்ளார்.

தனது ஜீரோ வேஸ்ட் வெட்டிங் பிளான் மூலம் உலகின் பல இடங்களிலும் அறியப்பட்ட உமா-ஸ்ரீ னிவாஸ் தம்பதியினர், இதுபோன்று சுற்றுச்சூழல் விழிப்புணர்வுடன் திருமணம் செய்ய விரும்பும் தம்பதியினருக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்கள். சுவாரஸ்யமாகவும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுடனும் நடைபெற்ற தன் திருமண நிகழ்வுகள் மற்றும் அதன் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் உமா.

“திருமணங்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது நிகழ்ச்சியின் இறுதியில் நிறைய கழிவுகள் சேருவதையும், உணவுகள் வீணாவதையும் பார்த்திருக்கிறேன். அதிலும் குறிப்பாக அதிகப்படியாக பிளாஸ்டிக் குப்பைகள் சேர்ந்திருக்கும். பொதுவாக பெரும்பாலான நிகழ்ச்சிகளில் இவ்வாறு நடப்பதை நம்மால் ஏன் தவிர்க்கமுடிவதில்லை என்று யோசிப்பேன். நீண்ட காலமாக எனக்குள் இந்த எண்ணம் இருந்து கொண்டிருந்ததால்தான் என் திருமணத்தின் போது இதில் மாற்றங்களை கொண்டுவர நினைத்தேன்.

என் திருமணத்தின் சில நாட்களுக்கு முன்பே நிகழ்ச்சிக்கு பின் உருவாகும் கழிவுகளை மேலாண்மை செய்வதையும் உணவு வீணாக்கப்படுவது தவிர்க்கப்படுவதையும் உறுதி செய்யும் வகையில் நிகழ்ச்சியை திட்டமிட்டேன். இதற்காக எனக்கு சிலரின் உதவிகள் தேவைப்பட்டதால், சுற்றுச்சூழல் விழிப்புணர்வுடன் செயல்படும் நிகழ்வு மேலாண்மை குழுவை சமூக வலைத்தளங்களில் தேடும்போது ‘கனெக்ட் டூ பூமி’ என்கிற குழு பற்றி எனக்கு தெரிந்தது.

என் விருப்பமும் அவர்களின் திட்டங்களும் ஒத்துப்போனது. திருமண நிகழ்ச்சியின் போதும் அதன் பின்னரும் தொடர்ந்து ஒத்துழைத்தார்கள். நான் மணப்பெண் என்பதால் நிகழ்ச்சியின் ஒவ்வொரு தருணத்திற்குப் பின்னும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுடன் நடக்கும் ஒவ்வொரு செயல்களையும் பதிவு செய்ய ஏற்பாடு செய்திருந்தேன். நிகழ்ச்சியில் உணவு விருந்து முடிந்த பிறகு மீதமான உணவுப் பொருட்கள், இலைகள் மற்றும் பிளாஸ்டிக் போன்றவை தனித்தனியாக பிரிக்கப்பட்டன.

இவை மட்டுமின்றி மேடை அலங்காரத்திற்கு பயன்படுத்தப்பட்டிருந்த இயற்கையான பூக்கள் தனியாகவும் செயற்கையான பொருட்கள் எல்லாம் தனியாகவும் பிரித்தெடுக்கப்பட்டன. இவ்வாறு பிரித்தெடுக்கப்பட்ட பொருட்களில் எதை எல்லாம் மறுசுழற்சி மற்றும் மேலாண்மை செய்ய முடியும் என்பதை திட்டமிட்டோம். இலை, சாப்பாடு போன்றவற்றை சென்னையில் கழிவு மேலாண்மை செய்யும் ஒரு இடத்திற்கு கொண்டு சென்று அவை உரமாக மாற்றப்பட்டன.

உணவுக்குப் பயன்படுத்தப்பட்ட கெட்டுப்போகாத காய்கறி, பழக்கழிவுகள் ஆகியவற்றை கால்நடை மருத்துவரின் ஆலோசனையின்படி மாடுகளுக்கு தீவனமாக வழங்கப்பட்டது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட 110 கிலோ கழிவுகளும் பயனுள்ளவையாக மாற்றப்பட்டன. திருமண நிகழ்ச்சி நடைபெறும் மண்டபம் முழுவதும் தண்ணீரை வீண் செய்ய வேண்டாம், கைக்குட்டையை பயன்படுத்துங்கள், டிஸ்ஸு பேப்பர்களை தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்கவும் என்பது போன்ற விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அவை சுவாரஸ்யமூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்ததால் நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்தனர்” என்று விளக்கிய உமா, தனது திருமணத்தில் தனக்கு விருப்பமான சுற்றுச்சூழலுக்கு உகந்த விஷயங்களையே பெரும்பாலும் தேர்ந்தெடுத்துள்ளார்.

“நான் பொதுவாகவே சஸ்டெயினபிலிட்டியை விரும்புவேன். என் அம்மாவின் அம்மா அதாவது, என் பாட்டியுடன் நான் மிகவும் அன்பாக நெருக்கமாக இருப்பேன். எனவே, இதில் நிலைத்தன்மையை கடைபிடித்தல் மட்டுமின்றி ஒரு அழகான நினைவாக இருக்கும் என்பதற்காகவும் திருமண சடங்குகளுக்கு நிறைய புதுப் புடவையை எடுக்காமல் என் பாட்டியின் புடவையை அணிந்திருந்தேன்.

இது ஒரு நிலையான வாழ்வியலுக்கு முன்னுதாரணமாக அமைந்ததோடு, உணர்வுபூர்வமான ஒன்றாகவும் இருந்தது. இது மட்டுமின்றி எங்களது திருமண அழைப்பிதழ் கூட சுற்றுச்சூழலுக்கு உகந்ததுதான். நிலத்தில் போட்டாலும் அதிலிருந்து செடிகள் முளைத்து வரும்படி விதைகள் பதிக்கப்பட்ட அட்டைகள் மூலம் அழைப்பிதழ் தயாரிக்க ஏற்பாடு செய்திருந்தேன். விதைகள் பதிக்கப்பட்ட அழைப்பிதழை எவ்வாறு கையாள வேண்டும் என்கிற விவரங்களும் அதிலேயே கொடுக்கப்பட்டிருக்கும். இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் காகிதங்கள் வழக்கமானவை அல்ல. மாறாக, கரும்பு சக்கையிலிருந்து மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்பட்ட காகிதங்கள். மேலும், இவை மிக எளிதில் மட்கும் தன்மை கொண்டவை.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வுடனும் நிலைத்தன்மை கடைபிடிக்கும் விதத்திலும் எல்லாவற்றையும் தேர்ந்தெடுத்து செய்த எனது திருமண பதிவுகளை கண்டு பலரும் வெகுவாக பாராட்டினார்கள்.
கனெக்ட் டூ பூமி குழுவினருடன் இணைந்து கழிவு மேலாண்மை செய்தது, மறுசுழற்சிக்கு பொருட்களை அனுப்பியது, கால்நடைகளுக்கு தீவனம் வழங்கியது போன்ற காட்சிகளை கொண்ட எனது திருமண நிகழ்ச்சியின் பதிவுகளை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தபோது 8 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைந்தது.

வெளிநாட்டினர் கூட காணொளியை பகிர்ந்து இதுகுறித்து பேசினார்கள். நான் விரும்பி செய்த இச்செயலால் பலரும் எங்கள் நிகழ்ச்சிகளிலும் இதுபோல செய்ய வேண்டும் என்று யோசனைகள் கேட்டு குறுஞ்செய்திகளை அனுப்பினார்கள். என் செயலை பார்த்து யாரோ ஒருவர் விழிப்புணர்வடைந்து அவரின் நிகழ்ச்சிகளிலும் இதுபோல செய்திருந்தாலும் எனக்கு அது சாதனைதான். நான் எங்கு வெளியில் சென்றாலும் எனக்கு அறிமுகம் இல்லாதவர்கள் கூட என் திருமணத்தைப் பற்றி என்னிடம் பேசுவார்கள்” என்று நெகிழ்ந்தவர், வருங்கால தம்பதிகளுக்கும் சில யோசனைகளை தருகிறார்.

“இனி வரும் காலங்களில் திருமணத்தை திட்டமிடும் போது இது போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நிலைத்தன்மையை கடைபிடிக்கின்ற, எதையும் பெரிதாக வீண் செய்யாத செயல்பாடுகளை தேர்ந்தெடுக்கலாம். ஒவ்வொரு திருமண நிகழ்வுக்கு பிறகும் டன் மற்றும் கிலோ கணக்கிலும் கழிவுகள் தேங்குகின்றன. இதைத் தடுக்க வேண்டுமெனில் ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன் இது போன்ற முன்னெடுப்புகளை செய்து வந்தால் நிச்சயம் சமூகத்தில் நல்ல மாற்றம் ஏற்படும் என்று நம்புகிறேன்.

மிக எளிதாக வெற்றிடமாக இருக்கும் நிலத்தில் குப்பைகளை கொட்டிவிடுகிறோம். ஆனால், அது பொறுப்புணர்வு இல்லாத ஒரு செயல். மட்கும் மற்றும் மட்கா குப்பை என பிரித்து
சேகரிப்பது போன்ற பழக்கங்களை வீட்டிலிருந்தே தொடங்கலாம். இதை சரியாக செய்தாலே தூய்மை பணியாளர்களுக்கு நாம் செய்கின்ற மிகப்பெரிய உதவியாக இருக்கும். திருமணத்திற்குப் பிறகு என் மாமனார்-மாமியார் வீட்டிலும் இதுபோன்ற பழக்கத்தை நான் கடைபிடிக்கிறேன். எனவே, ஒவ்வொருவரின் சிறிய பங்களிப்பு மூலம் சமூகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்” என்றார்.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்

 

Related Stories: