திருப்பூர், ஜூலை 18: திருப்பூர் பெருமாள் கோவில் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான பூ மார்க்கெட் கட்டிடத்தை சேலத்தை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் ஏலம் எடுத்துள்ளார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கடையின் வாடகையை உயர்த்தியுள்ளார். மேலும், வாடகை கொடுக்கவில்லை என்றால் கடையை காலி செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வாடகை வசூலிக்க ஒப்பந்ததாரர் தனது தரப்பினருடன் சென்றார்.
அப்போது வியாபாரிகளுக்கும், ஒப்பந்ததாரருக்கும் ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியது. இது குறித்து இருதரப்பினரும் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், வியாபாரிகள் தரப்பில் 4 பேர், குத்தகைதாரர் தரப்பினர் 4 பேர் என மொத்தம் 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
