திருப்பூர், ஜூலை 18: திருப்பூரில் பனியன் தயாரிப்பு பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இதன் காரணமாக ஏராளமானவர்கள் திருப்பூருக்கு வேலை தேடி வருகிறார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்பும் உடனே கிடைத்து வருகிறது. இந்நிலையில், பனியன் நிறுவனங்கள் ஆடைகளை தயாரிக்க சாயம் மற்றும் சலவை பணிகளை மேற்கொள்ள ஏதுவாக ஏராளமான சாய மற்றும் சலவை ஆலைகளும் செயல்பட்டு வருகின்றன. இதில், முறைகேடாக செயல்படுகிற சாய மற்றும் சலவை ஆலைகள் சாயக்கழிவுகளை நீர்நிலைகள் மற்றும் நிலங்களில் திறந்து விடுகின்றன.
இதனை கண்டறிந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதன்படி கடந்த மாதத்தில் திருப்பூர் காலேஜ் ரோடு, அங்கேரிபாளையம், சிறுபூலுவப்பட்டி, சாமுண்டிபுரம், நல்லூர், ஆண்டிபாளையம் ஆகிய பகுதிகளில் 30 பிரிண்டிங் நிறுவனங்கள், 1 சாய ஆலை, 3 சலவை ஆலைகள் என விதிகளை மீறி செயல்பட்ட 34 நிறுவனங்களின் மின் இணைப்புகளை அதிகாரிகள் துண்டித்துள்ளனர்.
