மணலி ஏரி படகு குழாமில் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள்: படகில் பிறந்தநாள் கொண்டாட விரைவில் ஏற்பாடு

திருவொற்றியூர்: மணலி மண்டலம், 20வது வார்டுக்கு உட்பட்ட காமராஜ் சாலையில், கடந்த திமுக ஆட்சியில் ரூ.10.41 கோடி மதிப்பீட்டில் மணலி ஏரியை தூர்வாரி, கரைகளை சீரமைத்து, நடைபாதை, திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், உணவகம் போன்ற பல்வேறு அம்சங்களுடன் படகு குழாம் அமைக்கப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் 13ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. சுமார் 29 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் 1,787 மீட்டர் சுற்றளவில் நடைபாதை மற்றும் படகு சவாரி என பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து இருப்பதால் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று, விடுமுறை நாட்களில் நூற்றுக்கணக்கானோர் இந்த மணலி ஏரி படகு குழாமிற்கு குடும்பத்துடன் குவிந்தனர்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்ட இந்த படகு குழாமில், புதிதாக சிறுவர்களுக்கான விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை சுற்றுலாத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், பேட்டரி கார், ஸ்ப்ரிங் ஜம்பிங், துப்பாக்கி, ஏர் ஜம்பிங் என பல வகையான விளையாட்டு உபகரணங்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் ஏரியில் அலங்கரிக்கப்பட்ட படகிலேயே பிறந்தநாள் கொண்டாடும் திட்டமும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மணலி ஏரியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குழந்தைகளுக்கான விளையாட்டு பொழுதுபோக்கு உபகரணங்களை மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் மற்றும் சென்னை மாநகராட்சி, மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தற்போது சோதனை அடிப்படையில் விளையாட்டு உபகரணங்கள் குழந்தைகளுக்கு பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு சில தினங்களில் முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என பொழுதுபோக்கு அம்சங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்களின் வருகை அதிகமாகி சுற்றுலாத் துறைக்கு வருமானமும் பெருகும் என்ன சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: