ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மூக்கண்டப்பள்ளி பகுதியில் வசித்து வருபவர் பச்சன். இவர் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ரோஷன் (18), கடந்த கல்வி ஆண்டில், ஓசூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார். அப்போது நடந்த பொதுத்தேர்வில், அனைத்து பாடத்திலும் அவர் தோல்வியடைந்தார். இதனால், மீண்டும் தேர்வு எழுத முடிவு செய்த மாணவன் ரோஷன் கடந்த 8ம் தேதி ஓசூர்-தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள ஒரு பள்ளியில், 10ம் வகுப்பு மறுத்தேர்வு எழுத சென்றுள்ளார். அப்போது, அவரது செல்போனை, அங்கு காவல் பணியில் இருந்த போலீசார் ஒருவர் வாங்கி பார்த்துள்ளார். அந்த செல்போனில் சிப்காட் போலீசார் வாகன தணிக்கை செய்யும் வீடியோ படம் பிடிக்கப்பட்டு இருந்ததை பார்த்த காவலர், அந்த செல்போனை ஓசூர் சிப்காட் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
பின்னர், இது சம்பந்தமான விசாரணைக்கு கடந்த 9ம் தேதி, சிப்காட் காவல் நிலையத்திற்கு சென்ற மாணவன் ரோஷனின் தாயார் சங்கீதா மற்றும் அவரது சகோதரர் ஆகியோர், அங்கு இருந்த காவலர் சந்திரன் என்பவரிடம் விபரங்களை கூறி செல்போனை கேட்டுள்ளனர். அப்போது, அவர் மாணவர் ரோஷனை அழைத்து வரும்படி கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் மாணவன் ரோஷன் சிப்காட் காவல் நிலையத்திற்கு சென்றபோது, எதற்காக செல்போனில் போலீசாரை வீடியோ எடுத்தாய் என கேட்டு, இனிமேல் அவ்வாறு செய்யக் கூடாது என எச்சரித்து எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி உள்ளனர். அப்போது காவலர் சந்திரன், மாணவன் ரோஷனிடம் ரூ.2000 வாங்கி கொண்டு செல்போனை கொடுத்ததாக கூறப்படுகிறது.
வீட்டிற்கு சென்ற மாணவன், தனது செல்போனில், `அம்மா நான் உன்னை அதிகமாக மிஸ் பண்றேன். உங்களுக்கு நல்ல பிள்ளையாக நான் இருக்கவில்லை’ என்று வீடியோ பதிவு செய்து விட்டு, வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் போலீசார், மாணவனின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.இந்த சம்பவத்தில் மாணவனின் இறப்புக்கு போலீசார் தான் காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டிய நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்திய மாவட்ட எஸ்பி அனிதா நேற்று, சிப்காட் பாரா காவலர் சந்திரனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
