பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற ஜே.சி.பி ஆப்ரேட்டர் சாலையோர தடுப்பு கட்டையில் மோதிஉயிரிழப்பு

பாடாலூர்: ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஜே.சி.பி ஆபரேட்டர் சாலையோர தடுப்பு கட்டையில் மோதி இன்று உயிரிழந்தார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா மருதடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் சக்திவேல் (19). இவர் ஜே.சி.பி ஆப்ரேட்டராக வேலை செய்து வந்தார். இவர் இன்று சிறுவாச்சூர் சென்று விட்டு மீண்டும் அவரது சொந்த ஊரான மருதடி கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நாரணமங்கலம் சர்வீஸ் சாலையில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories: