×

அடுத்த மக்களவை தேர்தலுக்குள் ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கான திட்டம் தயாராகி விடும்: நாடாளுமன்ற கூட்டு குழு தலைவர் தகவல்

பனாஜி: ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்துவதற்கான அரசியலமைப்பு திருத்த மசோதாக்களை ஆய்வு செய்ய பாஜ எம்பி.யும், முன்னாள் அமைச்சருமான பி.பி.சவுத்ரி தலைமையில் நாடாளுமன்றக் கூட்டு குழுவை(ஜேபிசி) அரசு அமைத்துள்ளது. இந்த குழுவின் இரண்டு நாள் கூட்டம் கோவாவில் நடந்தது. அதன் பின் பி.பி.சவுத்ரி, நேற்று பேட்டியளித்தார். அவர் கூறியதாவது: அடிக்கடி நடைபெறும் தேர்தல்களால் இந்தியப் பொருளாதாரத்திற்கு கிட்டத்தட்ட ரூ. 7 லட்சம் கோடி இழப்பு ஏற்படுகிறது.

கோவா முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் நாங்கள் கலந்துரையாடல் நடத்தினோம். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை எவ்வாறு செயல்படுத்துவது, என்னென்ன சவால்கள் உள்ளன. அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சிறந்த சமநிலையை ஏற்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், அரியானா மற்றும் டெல்லிக்கு ஏற்கனவே பயணம் செய்துள்ளோம்.

அங்கு அரசியலமைப்பு நிபுணர்கள், கல்வியாளர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.குறிப்பாக சிவில் சமூகம் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களில் 99 சதவீதம் பேர் ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்துவதை ஆதரிப்பதை கண்டறிந்துள்ளோம். அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஏற்புடைய ஒரு வழிமுறையை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.

அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்பாக சீர்திருத்தம் அமலுக்கு வர வழிவகுக்கும் வகையில் பல்வேறு மாதிரிகள் ஆராயப்பட்டு வருகிறது. ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு பொருளாதார மதிப்பீட்டின்படி, நாடு முழுவதும் தனித்தனியாக தேர்தல்களை நடத்துவதால் ரூ.7 லட்சம் கோடி இழப்பு ஏற்படுகிறது.

அதே சமயம் ஒருங்கிணைந்த தேர்தல்கள் அதற்கு இணையான பொருளாதார ஆதாயங்களை அளிக்கக்கூடும் என்பது தெரியவந்துள்ளது. தேர்தல்கள் ஒரு மாநிலத்திற்குள் மட்டும் கட்டுப்படுத்தப்படவில்லை. பொருளாதாரம் ஒன்றோடொன்று இணைந்துள்ளதால், எங்கு தேர்தல் நடந்தாலும் அது மற்ற மாநிலங்களில் தாக்கத்தை உருவாக்குகிறது. இவ்வாறு பி.பி.சவுத்ரி கூறினார்.

Tags : Lok Sabha ,Joint Parliamentary Committee ,Panaji ,JPC ,BJP ,minister ,P.P. Chowdhury ,Nation ,Goa ,
× RELATED தவெக பிரமுகர் மீது போக்சோ வழக்குப் பதிவு!