*நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அவதி
*பொதுமக்களின் அன்றாட பணிகள் பாதிப்பு
பெரணமல்லூர் : பெரணமல்லூர் கிராமப்புறங்களில் அறிவிக்கப்படாத மின்ெவட்டு தொடர்ந்து வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதிபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். மாவட்டத்தில் பெரணமல்லூர் பகுதியில் உள்ள ஆவணியாபுரம், மேல்சாத்தமங்கலம், கொழப்புலூர், நாராயண மங்கலம், இஞ்சிமேடு உள்ளிட்ட 20க்கம் மேற்பட்ட கிராமப்புறங்களில் கடந்த சில நாட்களாக காலை, இரவு நேரத்தில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு நிலவி வருகிறது.
அனைத்து தரப்பினரும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறியதாவது: எங்கள் கிராம பகுதியில் கடந்த சில நாட்களாக காலை, இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுவதால் எங்களால் குறிப்பிட்ட ேவலைகளை முடிக்க முடியாமல் திணறி வருகிறோம். குறிப்பாக இரவு நேரத்தில் திடீரென நிகழும் மின்வெட்டால் ஏற்படும் புழுக்கத்தினால் இரவு தூக்கம் பறிபோகிறது.
அதனை தொடர்ந்து காலை நேரத்தில் பள்ளி மற்றும் அலுவலக பணிகளுக்கு செல்வோர்களுக்கு உண்டான சமையல் செய்து கொடுத்தல், துணிகளுக்கு இஸ்திரி போட்டு தருவது என முக்கியமான பணிகளை செய்து கொடுப்பதில் எங்களுக்கு தடங்கல் ஏற்பட்டு வருகிறது. இந்த மின்வெட்டு கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத நேரத்தில் ஏற்படுவதால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறோம்.
வீட்டில் வீட்டு உபயோகத்துக்கு பயன்படும் மின்சாரத்துக்கு இந்த நிலை என்றால் விவசாயத்திற்கு செல்லும் மும்முனை மின்சாரமும் தொடர்ந்து கொடுக்காமல் எப்போது வரும் எப்பொழுது கட்டாகும் என்ற நிலையில் மின்சாரம் கொடுப்பதால் விவசாயிகள் பம்பு செட்டு மூலம் விளைச்சலுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் திண்டாடி வருகிறோம். இந்நிலை குறித்து உரிய அதிகாரியை தொடர்பு கொள்ள செல்போனை தொடர்பு கொண்ட போது அவரது எண் எப்போதும் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது என்ற செய்தியே வருகிறது. இதுதவிர மின்வாரியத்திற்கும் உரிய தொடர்பு எண் எப்பொழுதும் பிஸியாகவே உள்ளதால் அவர்களையும் எளிதில் தொடர்பு கொள்ள முடியவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பினர்.
மாணவர்களின் படிப்பும் பாதிப்பு
பள்ளி மற்றும் கல்லூரியை முடித்து வீட்டுக்கு வரும் மாணவ, மாணவிகள் மாலை நேரத்தில் வீட்டில் படிப்பார்கள். இப்படி மாணவர்கள் படிக்கும்போது அடிக்கடி மின்வெட்டு ஆகிறது. வசதியுள்ளவர்கள் வீட்டில் எமர்ஜன்சி லைட் வைத்து படிக்கிறார்கள். அதுவும் குறிப்பிட்ட நேரம்தான் பயன்படுகிறது. மெழுகுவர்த்தி கேண்டல்களை வைத்து மாணவர்கள் படிப்பதாகவும் தெரிவிக்கின்றனர். குறிப்பாக தொடரும் மின்வெட்டால் பள்ளியில் கொடுக்கும் பாடங்களை எழுதி, படிக்க முடியாமல் மாணவர்களின் படிப்பும் அதிகளவில் பாதிக்கப்படுகிறது என பெற்றோர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
பழுதாகும் எலக்ட்ரிக் பொருட்கள்
பெரணமல்லூரில் உள்ள கிராமப்புறங்களில் விவசாயத்திற்கு செல்லும் மும்முனை மின்சாரமும் அடிக்கடி மின்வெட்டு ஆவதால் மோட்டார்கள் பழுதடைகிறது. இதேபோல் வீடுகள், கடைகளில் உள்ள எலக்ட்ரீக் பொருட்கள் லோ வோல்ட்டேஜ் ஆகி சேதமடைகிறது. இதனை சரிசெய்ய பொதுமக்களும்,விவசாயிகளும் கடும் அவதியடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
