ராமநாதபுரம், ஜூலை 9: ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஆதார் கார்டு ஓடிபி கேட்பதால் செல்போன் இல்லாத புறநோயாளிகள் அவதி அடைந்துள்ளனர். இதனை எளிமை படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சுற்று வட்டார கிராமமக்கள், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளை சேர்ந்தவர்கள், சுற்றுலா மற்றும் பல்வேறு காரணமாக வரும் வெளிமாவட்டத்தினர் என நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும், 300க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக தங்கி பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனைக்கு பரிசோதனை, சிகிச்சைக்காக வரும் பொதுமக்கள் ஓபி சீட் பெறுவதற்கு டிஜிட்டல் முறையில் பதிவு செய்வதற்கு ஆதார் எண் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் நம்பருக்கு வரும் ஓடிபி எண் எனப்படும் கடவுச் சொல் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனால் மருத்துவமனைக்கு வரும் முதியோர், செல்போன் இல்லாதோர், ஆதாருடன் செல்போன் எண்ணை இணைக்காதவர்கள் ஓடிபி எண் இல்லாமல் பெயர் பதிவு செய்ய முடியவில்லை. மேலும் ஆதார் அட்டை கட்டாயம் என்ற விழிப்புணர்வு இல்லாமல் மருத்துவமனை வரும்போது ஆதார் கார்டு இல்லாமல் வருகின்றனர். இதனால் பாமர மக்கள் முதல் படித்தவர்கள் வரை செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
