திருச்சுழி, ஜூலை 8: நரிக்குடி அருகே உள்ள மினாக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் திலகவதி (38). இவரும், இவரது கணவர் முருகனும் (42) தங்களது குழந்தைகளுடன் மும்பையில் வசித்து வருகின்றனர். சமீபத்தில் குடும்பத்துடன் சொந்த ஊரான மினாக்குளத்திற்கு வந்து விட்டு மீண்டும் மும்பை திரும்புவதற்காக, தங்களது உடைமைகளை 2 சூட்கேஸ்களில் எடுத்துக்கொண்டு அதனை காரின் மேல்பகுதியில் வைத்துக்கொண்டு, மதுரை ரயில் நிலையம் நோக்கிப் புறப்பட்டனர். மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, காரின் மேலே இருந்த இரண்டு சூட்கேஸ்களில் ஒன்று திடீரென காணாமல் போனதை அறிந்து தம்பதியினர் அதிர்ச்சியடைந்தனர். அந்த சூட்கேஸில் செயின், மோதிரம் மற்றும் வெள்ளி நகைகள் உள்ளிட்ட 5.5 பவுன் நகைகள் இருந்துள்ளது.
இதனையடுத்து, மினாக்குளம் முதல் கருவக்குடி வரையிலான பகுதிகளில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை அவர்கள் ஆய்வு செய்தனர். அதில், கார் அழகாபுரி பகுதியில் சென்ற போது மேலே 2 சூட்கேஸ்களும் இருந்ததும், அ.முக்குளம் பகுதியைச் சென்றடைந்த போது ஒரு சூட்கேஸ் மட்டும் காணாமல் போயிருந்ததும் பதிவாகியிருந்தது. இது தொடர்பாக அ.முக்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளின் ஆதாரத்தைக் கொண்டு அ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
