பொன்னமராவதி, ஜூலை 8: பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பகுதியில் 77 அங்கன்வாடி பணியாளர்கள் இல்லாமல் உள்ளது. பொன்னமராவதி ஒன்றியத்தில் 122 அங்கன்வாடி மையம் உள்ளது. பொன்னமராவதி ஒன்றியத்தில் 115 முதன்மை மையங்கள், 7 மினி மையங்கள் உள்ளது. இந்த மையங்களுக்கு அங்கன்வாடிப்பணியாளர் மற்றும் உதவியாளர்கள். சமையலர் என நியமிக்கப்பட்டு செயல்பட்டு வந்தனர். ஆனால் தற்போது 80 அங்கன்வாடிப்பணியாளர்கள் 68 சமையலர்கள் மட்டுமே உள்ளனர்.
இதில் ஊத்துக்குழி, பாண்டிமான்நகர், இந்திராநகர், பொன்னமராவதி, தூத்தூர் உள்ளிட்ட 35மையங்களுக்கு பணியாளர்கள் யாருமே இல்லாமல் செயல்பட்டு வருகின்றது. இப்பகுதியில் 35 அங்கன்வாடிப்பணியாளர்கள், 42 சமையலர்கள் உள்பட பணியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் ஒரு பணியாளர் இரண்டுக்கு மேற்பட்ட மையங்களை பார்க்கின்றனர். இதனால் எந்த மையத்திலும் அவர்கள் ஒழுங்காக இருந்து குழந்தைகளை கவனிக்க முடியாத நிலை உள்ளது. ஆரம்பத்தில் அடிப்படையில் கல்வி கற்கும் இடமாக உள்ள அங்கன்வாடி மையத்திற்கு அனைத்து பணியிடங்களையும் நிரப்பி குழந்தைகளின் வாழ்வு செழிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
