திருச்சி: திருச்சி கொட்டப்பட்டு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன் (32). இவர், நேற்றுமுன்தினம் மாலை உறவினரான நாகராஜுடன் (33) வீடு அருகே பேசிக்கொண்டிருந்தார். அப்போது 4 பேர் அந்த பகுதியில் சுற்றி திரிந்துள்ளனர். அவர்களிடம் கஞ்சா புகைக்க செல்கிறீர்களா என கேட்டுள்ளனர். கஞ்சா போதையில் இருந்த அவர்கள் இருவரையும் தாக்கியதோடு அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர். படுகாயமடைந்த இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
இது ெதாடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பொன்மலை போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் பொன்மலை அடிவாரம் பகுதியை சேர்ந்த முகமது ஜப்ரான் (19), ரோகித் ஜான் (22), ஷாருக்கான் (20), மெல்லின் மோகன் (20) என்பதும், ரவுடிகளான இவர்கள் கஞ்சா போதையில் 2 பேரை அரிவாளால் வெட்டியதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து 4 பேரையும் நேற்று கைது செய்தனர்.
போதைபொருள் பயன்படுத்தும் சிறுவர்கள்: திருச்சி உறையூர் பகுதியில் உள்ள காலி மைதானத்தில் நேற்று பகல் நேரத்தில் 2 சிறுவர்கள் போதை பொருள் பயன்படுத்தும் அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. உறையூர் போலீசார் நடத்திய விசாரணையில் போதை பொருள் பயன்படுத்திய இருவரும் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
