கோவா லாட்ஜில் பயங்கரம்; தொழிலதிபருக்கு மயக்க மருந்து கொடுத்து கொன்று நகைகள் கொள்ளையடித்த பெண்

பனாஜி: கர்நாடகா மாநிலம் மால்பே பகுதியைச் சேர்ந்த நீர் விளையாட்டு உபகரணங்கள் வாடகைக்கு விடும் பிரபல தொழிலதிபர் சந்தீப் சாலியன் (41), கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி தனது நண்பர்களுடன் கோவாவிற்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்குள்ள கலங்குட் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்த அவர், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு விடுதி அறையில் மர்மமான முறையில் மயங்கிக் கிடந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆரம்பத்தில் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில், அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி மற்றும் தங்கக் காப்பு காணாமல் போனதால் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. விடுதியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சந்தீப் சாலியனுடன் ஒரு பெண் விடுதிக்கு வருவதும், பின்னர் அவர் மட்டும் தனியாக வெளியேறுவதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் செல்போன் எண்களைக் கொண்டு நடத்திய தீவிர விசாரணையில், இப்பெண் பெங்களூருவைச் சேர்ந்த அக்ஷதா (40) என்பது கண்டறியப்பட்டு கர்நாடக போலீசார் உதவியுடன் கைது செய்யப்பட்டார்.

போலீசாரின் விசாரணையில், கைது செய்யப்பட்ட அக்ஷதா பல பெயர்களில் அடையாளங்களை மாற்றி காதல் வலையில் பணக்காரர்களை வீழ்த்தும் கும்பலைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. சூதாட்ட விடுதிகளுக்கு வரும் வசதியான தொழிலதிபர்களுடன் பழகி, அவர்களை விடுதி அறைகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் ஆசை காட்டி, குளிர்பானங்களில் அதிகளவு மயக்க மருந்து கொடுத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடிப்பதை இவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இதற்கிடையே, கோவா போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி அமோன்கர் கூறுகையில், ‘விசாரணையில் இப்பெண் இதற்கு முன்பும் குஜராத் தொழிலதிபர் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து 2.40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளைத் திருடிய வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ளார்’ என்றார். சந்தீப் சாலியன் கொலை வழக்கில், அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து கொடுத்ததால் தான் அவர் உயிரிழந்துள்ளார் என்பதை உறுதி செய்துள்ள கலங்குட் போலீசார், இப்பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தீவிர காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: