திருவொற்றியூர்: ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட படங்களை வெளியிடுவேன் என்று மிரட்டி தோழியிடம் பணம் பறித்த வாலிபரை கைது செய்தனர். சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் 23 வயது பெண். எர்ணாவூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (35). இவர்கள் கடந்த 8 ஆண்டுகளாக நண்பர்களாக பழகியுள்ளனர். அந்த இளம் பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் போடும் பழக்கம் உடையவர். இதை தெரிந்துகொண்ட சதீஷ், போலி ஐ.டி. மூலம் வேறு நபர்போல் பெண்ணிடம் இன்ஸ்டாகிராம் மூலம் மெசேஜ் அனுப்பி தொடர்ந்து பேசி வந்துள்ளார்.
மேலும் இளம்பெண், ரீல்ஸில் போட்டிருந்த புகைப்படங்களை எடுத்த சதீஷ், ஆபாசமாக சித்தரித்து, அந்த பெண்ணுக்கே அனுப்பிவைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பயந்துபோன இளம்பெண் விசாரித்தபோது அது சதீஷ் என்பதும் தெரிந்ததும் கடும் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து தான் சேர்த்துவைத்திருந்த 50 ஆயிரம் ரூபாயை சதீசுக்கு கொடுத்ததாகவும் தெரிகிறது.
ஆனால் இதன்பிறகும் பணம் கேட்டு மிரட்டியபோது அவர் பணம் இல்லை என்று கூறியதும் ‘’ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட உனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வேன். இல்லாவில் கொலை செய்து விடுவேன்’’ என்று மிரட்டியிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், உடனே திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுசம்பந்தமாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த சதீஷை நேற்றிரவு கைது செய்தனர்.
