தேனியில் ஓய்வு எஸ்ஐ வீட்டின் பூட்டை உடைத்து 90 பவுன் திருட்டு

 

தேனி, ஜூன் 29: தேனி அருகே ஓய்வு பெற்ற எஸ்.ஐ வீட்டில் ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் 90 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தேனி அருகே பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ். ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இந்நிலையில் இவரது மனைவி லட்சுமி(53), சில நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் வேளாங்கண்ணி கோயிலுக்குச் சென்று இருந்தார். நேற்று முன்தினம் இவரது வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.3 லட்சம் பணம் மற்றும் சுமார் 90 பவுன் நகைகள் திருடு போயிருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து அவர் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் வீட்டின் அருகே உள்ள சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனியில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வீட்டிற்குள்ளேயே நகை மற்றும் பணம் திருட்டு நடந்துள்ளது பொது மக்களை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

 

Related Stories: