திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்: வைகோ கூடாரம் காலியாகிறது

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சிவகங்கை, திருவள்ளூர், விருதுநகர், திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த மதிமுக நிர்வாகிகள் நேற்று திமுகவில் இணைந்தனர். திமுக தலைமையிலான அணியில் மதிமுக சுமார் 9 ஆண்டுகளாக நீடித்து வந்தது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டது. 4 தொகுதிகளிலும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிட்டது. இதில் கடையநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட ராஜேந்திரன், சீர்காழி தொகுதியில் போட்டியிட்ட செந்தில் செல்வன் ஆகிய 2 பேர் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில் சட்டசபை தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மெஜாரிட்டிக்கு 118 தொகுதிகள் வேண்டும் என்பதால், திமுக கூட்டணியில் இடம்பெற்று வெற்றி பெற்ற கட்சிகளின் ஆதரவுடன் மைனாரிட்டி அரசை அமைத்துள்ளது. இந்தச் சூழலில், அடுத்ததாக மதிமுகவும் அதே அரசியல் திசையை நோக்கி நகரும் அறிகுறிகள் தென்படுவதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், மதிமுகவின் உயர் நிலைக்குழு கூட்டம் எழும்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது.

இக் கூட்டத்தை சீர்காழி எம்எல்ஏ செந்தில்செல்வன் புறக்கணித்தார். உயர் நிலைக்குழு கூட்டத்தில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெகவுடன் கூட்டணி அமைப்பது என்றும், அதற்கு வசதியாக மதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வது என்றும் விவாதிக்கப்பட்டது. இதன்பின்னர் நேற்று முன்தினம் சென்னையில் மதிமுக பொதுக்குழு கூட்டம் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நடந்தது. கூட்டத்தை மதிமுக 2 எம்எல்ஏக்களும் புறக்கணித்தனர். முதன்மை செயலாளர் துரை வைகோவும் பங்கேற்கவில்லை.

பொதுக்குழுவில் திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக வைகோ அறிவித்தார். அதே நேரத்தில் 2 மதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைப்பதோடு, அதன் மூலம் நடக்கக்கூடிய இடைத்தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் மூத்த உறுப்பினராக வைகோவை நிறுத்தி வெற்றி பெற வைக்கிறோம் என்று தவெக தரப்பில் இருந்து உறுதி அளிக்கப்பட்டதாகவும் ஒரு பரபரப்பு தகவல் வெளியானது. வைகோ வெற்றி பெற்ற உடன் அமைச்சர் பதவி வழங்கி, செல்வம் கொழிக்கக்கூடிய முக்கிய இலாகாக்களில் ஏதாவது ஒன்றை ஒதுக்குவதாகவும் தவெகவின் ஆதவ் தரப்பில் இருந்து பேசப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் மதிமுக 2 எம்எல்ஏக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய போவதில்லை என்று அறிவித்து விட்டனர்.  இந்நிலையில் மதிமுக எம்எல்ஏ செந்தில் செல்வன் மதிமுகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி விட்டதாக அதிரடியாக அறிவித்தார். திமுக சட்டமன்ற உறுப்பினராகவே தொடரப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் வைகோ அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில் மதிமுகவில் இருந்து விலகிய எம்எல்ஏ செந்தில் செல்வன் தனது ஆதரவாளர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே நேரத்தில் கடையநல்லூர் மதிமுக எம்எல்ஏ ராஜேந்திரன் என்ன முடிவை எடுக்க போகிறார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியதற்கு மதிமுகவிற்குள் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த முடிவுக்கு மதிமுகவில் உள்ள தலைவர்களே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், மதிமுகவைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகிகளான சிவகங்கை மாவட்டச் செயலாளரும் உயர்நிலைக்குழு உறுப்பினருமான புலவர் செ.செவந்தியப்பன், திருவள்ளூர் மாவட்டச் செயலாளரும் உயர்நிலைக்குழு உறுப்பினருமான டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், கொள்கை பரப்பு செயலாளரும் உயர்நிலைக்குழு உறுப்பினருமான திருப்பரங்குன்றம் பொடா அழகுசுந்தரம், விருதுநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.எம்.எஸ்.சேகர், மாநில தேர்தல் பணி துணைச் செயலாளர் தஞ்சாவூர் விடுதலைவேந்தன், தலைமைச் செயற்குகுழு முன்னாள் உறுப்பினர் டி.ஆர்.ஆர்.மதியழகன்;

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளான மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் ஆர்.எஸ்.கோவிந்தராஜன், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ம.ராஜகோபால், சாமளாபுரம் பேரூர் செயலாளர் எஸ்.செல்வராஜ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளரும் பல்லடம் நகர்மன்ற துணைத் தலைவருமான நர்மதா இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், சாமிநாதன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் கார்த்திக்,

பல்லடம் நகர துணைச் செயலாளர் ஜெகநாதன், பல்லடம் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் வெங்கடேஷ் மற்றும் முன்னாள் நிர்வாகிகளான மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் புதுக்கோட்டை சதாசிவம், மாநில மாணவர் அணி துணைச் செயலாளர்கள் சிவகாசி மு.செல்வராஜ், திருப்பூர் ஆர்.எஸ்.கோவிந்தராஜன், நகரச் செயலாளர் எஸ்.கே.ரவிச்சந்திரன், ஆர்.எம்.எஸ்.சேகர், விருதுநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி வழக்கறிஞர் பாரதமணி, மதுரை மாவட்ட பொறியாளர் அணி சி.எல்.ராஜா,

சிவகங்கை மாவட்ட நிர்வாகிகளான மாவட்ட அவைத்தலைவர் எம்.ஜெயபிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர்களான என்.ராமச்சந்திரன், ஏ.சி.முத்து, பி.சதாசிவம், இளைஞர் அணி வி.அருள்செல்வம், பி.கந்தசாமி, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட பொறியாளர் அணி கே.ரகுராமகிருஷ்ணன், பொன்னேரி பேரூர் செயலாளர் மதிவாணன், மோகன், ஞானவேல் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஆகாஷ்ராஜ், மேலும், பொடா அழகுசுந்தரம் ஏற்பாட்டில் சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக மாணவர்கள் ஏ.அன்பரசன் தலைமையில் 40 பேர் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.

அப்போது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கே.கலைவாணன், எம்.எல்.ஏ., திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளர் ஆவடி சா.மு.நாசர், மகளிர் அணி தலைவர் விஜயாதாயன்பன், பல்லடம் முத்துரத்தினம், தாராபுரம் கவின்நாகராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

மதிமுகவில் இருந்து அடுத்தடுத்து நிர்வாகிகளாக இருந்தவர்கள் ெவளியேறி வருவது மதிமுக தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் பலர் மதிமுகவில் இருந்து வெளியேற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மதிமுக கூடாரமே காலியாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் வைகோ கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

* திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியதற்கு மதிமுகவிற்குள் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த முடிவுக்கு மதிமுகவில் உள்ள தலைவர்களே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: