தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் கடிதம்

சென்னை: தேசிய மருத்துவ ஆணையம் நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்க கூடாது, “MBBS படிப்பிற்கு நான்கரை ஆண்டுகளுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும், தேசிய மருத்துவ ஆணையம் நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்க கூடாது என்று தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் கடிதம் அனுப்பியுள்ளது.

முன்னதாக, மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் 5.5 ஆண்டுகளுக்கான எம்பிபிஎஸ் (MBBS) பாடப்பிரிவுக் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என்று அறிவுறுத்தும் தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) சமீபத்திய அறிவுறுத்தலை, தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (DME) வெளியிட்டது.

அதன்படி, தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும், நிர்ணயிக்கப்பட்ட நான்கரை ஆண்டு காலப் படிப்புக்கு மட்டுமே MBBS கல்விக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மாநிலத்தின் ‘கட்டண நிர்ணயக் குழு’ (Fee Fixation Committee) அங்கீகரித்த தொகையைத் தாண்டி வேறு எந்தக் கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது என்றும் அந்தக் குழு கல்வி நிறுவனங்களை எச்சரித்துள்ளது. ஜூன் 23, 2026 தேதியிட்ட அறிவிப்பு ஒன்றின் மூலம், மாணவர் சேர்க்கைக் குழு (Selection Committee) தேசிய மருத்துவ ஆணையத்தின் ஏப்ரல் 7, 2026 தேதியிட்ட பொது அறிவிப்பைச் சுட்டிக்காட்டியது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் MBBS கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கப்பட்ட நான்கரை ஆண்டு காலப் படிப்புக்கு மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று அந்த ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு ஏப்ரல் 8, 2026 அன்று அனைத்து சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மாநில தனியார் பல்கலைக்கழகங்களுக்கு இது குறித்த தகவலைத் தெரிவித்தது. மேலும், அனைத்து சுயநிதி மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மாநில தனியார் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகள், ‘சுயநிதித் தொழில்முறை கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணயக் குழுவின்’ ஜூன் 12, 2025 தேதியிட்ட நடைமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும், அக்குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைத் தவிர வேறு எந்தக் கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Related Stories: