.
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்படுவதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக எ.வ.வேலு இருந்தபோது பொதுப்பணித்துறையில் கமிஷன் பெற்றதாக புகார் எழுந்தது. பணி நியமனத்திற்கும் பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் சோதனை நடக்கிறது. சென்னை உள்பட 13 இடங்களில் சோதனை என தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, திருவண்ணாமலையில் உள்ள எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, முன்னாள் பொறியாளர்கள் உள்ளிட்ட 11 பேர் மீது 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை. 2022ம் ஆண்டு சாலை விரிவாக்கம் தொடர்பாக சங்கரானந்த் இன்ப்ரா நிறுவனத்திற்கான ரூ.7 கோடிக்கு டெண்டர் வழங்கியதில் வேலை நடக்காமல் ரூ.3.23 கோடி இழப்பு ஏற்பட்டதாக புகார் அளித்தனர்.
இந்த சோதனைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் அன்புச் சகோதரர் எ.வ. வேலு அவர்களின் வீட்டில் தமிழ்நாடு அரசின் DVAC ரெய்டு நடத்தி வருகிறது. அதற்கு அவர் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறார். சட்டப்படி எதிர்கொண்டு, நீதிமன்றத்தில் அவர் தரப்பு நியாயத்தை நிரூபிப்பார்.
அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன், திமுக ஆட்சிக்காலத்தில் ஊழல் என இதுவரை தொடரப்பட்ட ஒரு வழக்கில் கூட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடிந்ததில்லை என்பதே வரலாறு. ஆளும்கட்சியினரின் இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக! இதைவிடப் பெரிய அடக்குமுறைகளையே பார்த்தவர்கள் நாங்கள். இதையும் எதிர்கொண்டு வெற்றிபெறுவோம் என்று தெரிவித்துள்ளார்
