×

அமோனியா வாயு கசிவுவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9-ஆக உயர்வு

திருவள்ளூர் : ஊத்துக்கோட்டை அருகே கடல் உணவு ஏற்றுமதி நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

ஊத்துக்கோட்டை அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள இறால் உள்ளிட்ட கடல் மீன்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அமோனியா வாயு கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக மூச்சுத்திணறல் மற்றும் காயத்தால் வடமாநிலத் தொழிலாளர்கள் 65-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

அவர்கள் உடனடியாக திருவள்ளூர் மஞ்சங்காரணை தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு 2 பெண்கள் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களில் 17 பேர் கவலைக்கிடமான நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை, ராஜீவ்காந்தி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த கீதா ஆஸ்தா (24), ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த சபினி(22) ஆகிய இரு பெண்கள் திங்கள்கிழமை உயிரிழந்தனர். இதேபோல, மஞ்சங்காரணை தனியார் மருத்துவமனையில் ஒடிஸாவை சேர்ந்த பூர்ணிமா, திலோமினி, பராத்தி ஜிங்கா(19) உள்ளிட்ட 4 பெண்கள் உயிரிழந்தனர். இதன் காரணமாக, அமோனியா வாயு கசிவு விபத்தால் பலியானவர்கள் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சிலா சுரின்(26) இன்று உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் 50-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, விபத்து தொடர்பாக தனியார் கடல் உணவு ஏற்றுமதி தொழிற்சாலை உரிமையாளர் சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மோகன், அவரது சகோதரர் ஜெகன், மேலாளர் டேனியல் ஆகியோரை பெரியபாளையம் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடல் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையில் அமோனியா வாயு 6 டன் வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அமோனியா வாயுவை டேங்கர் லாரி மூலம் வேறு இடத்துக்கு மாற்றுவதற்காக கொண்டு செல்ல அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags : Thiruvallur ,Uthukkottai ,Kannikaiper ,
× RELATED மனுநீதி நாள் முகாமில் அளிக்கப்படும்...