×

கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள்

*கலெக்டர் வந்தனா கார்க் வழங்கினார்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் வந்தனா கார்க் தலைமையில் நடந்தது. அதில், டிஆர்ஓ ராம்பிரதிபன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, மாவட்ட மறுவாழ்வு அலுவலர் மாலதி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், சுய தொழில் கடனுதவி, தாட்கோ கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 486 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

அதன்மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், கடந்த வாரங்களில் பெற்ற மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து துறைவாரியாக ஆய்வு செய்தார். நிலுவையில் உள்ள மனுக்களுக்கு தீர்வு கண்டு, உரிய பதிலை மனுதாரருக்கு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் அமர வைக்கப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் வந்தனா கார்க், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.73,905 மதிப்பில் 4 பேருக்கு செயற்கை கால்கள் (காலிப்பர்), ரூ.6,570 மதிப்பில் 2 பேருக்கு காதொலி கருவிகள், 2 பேருக்க காப்பீடு அட்டைகள் ஆகியவற்றை வழங்கினார்.

இந்நிலையில், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர்வு முகாமிற்கு வரும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், முதன் முறையாக அரசு துறைகளின் சார்பில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடந்த மருத்துவ முகாமில், ரத்த பரிசோதனை, சர்க்கரை நோய் கண்டறிதல் மற்றும் பொது மருத்துவம் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.

அதேபோல், மகளிர் திட்டம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட சத்துமாவு மற்றும் செக்கு எண்ணெய் உள்ளிட்ட இயற்கை சார்ந்த மதிப்புக்கூட்டு பொருட்கள் மதி அங்காடி மூலம் விற்பனை செய்யப்பட்டது.

அதோடு, கூட்டுறவு துறை சார்பில் நியாய விலைப் பொருட்கள் விற்பனை அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது.வழக்கம் போல, குறைதீர்வு கூட்டத்தில் தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்களை தடுக்க, கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூடுதல் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

ஆரணியில் 64 பேர் மனு

ஆரணி வருவாய் கோட்டாசியர் அலுவலகத்தில் வாரந்திர மக்கள் குறைத்தீர்வு கூட்டம் நேற்று ஆர்டிஓ சிவா தலைமையில் நடந்தது. இதில், வருவாய் மற்றும் பிறதுறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, ஆர்டிஓ சிவா பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்தினார். அப்போது, ஆரணி வருவாய் கோட்டத்தில் உள்ள ஆரணி, போளூர், ஜமுனாமரத்தூர், கலசப்பாக்கம் ஆகிய தாலுகாவில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு 64 கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

Tags : Collector ,Vandana Cork ,Tiruvannamalai ,DRO Ramprathiban ,Rural Development Agency ,Mani ,Officer ,
× RELATED ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் சுத்திகரிப்பு 50 % பாதிப்பு!