*விவசாயிகள் கவலை
பாவூர்சத்திரம் : போதிய மழை இல்லாததால் கீழப்பாவூர் பேரூராட்சி அருகேயுள்ள கடம்பன்குளம் வறண்டு காணப்படுகிறது. இதனால் இக்குளத்தை நம்பி பாசன வசதி பெரும் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.
மேற்குதொடர்ச்சி மலை பகுதியான செங்கோட்டை, புளியரை மலைப்பகுதிகளில் பெய்யும் மழை நீர் சிற்றாறு-2 வழியாக வரும் நீர் தென்காசி, கடபோகத்தி, மேலப்பாவூர், கீழப்பாவூர் குளங்களில் நிரம்பிய பின்னர் மறுகால் பாய்ந்தோடி நாகல்குளம் நிரம்புகிறது. பின், நவநீதகிருஷ்ணபுரம், பூபாலசமுத்திரம் ஓடை வழியாக சென்று கடம்பன்குளத்திற்கு தண்ணீர் வந்து சேரும். இந்த குளத்தை நம்பி 600 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களில் நெல், பல்லாரி, கத்தரிக்காய், வெண்டை, தக்காளி என விவசாயிகள் பயிரிட்டனர்.
தற்போது தென்மேற்கு பருவ மழை இல்லாததால் இக்குளத்திற்கு தண்ணீர் வரத்து இல்லாததால் இந்த குளம் நிரம்பவில்லை. இதனால் விவசாயி வாழ்வாதரம் பாதிக்கப்பட்டு வெளியூர் மற்றும் கேரளாவுக்கு கட்டிட கூலி வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.இப்பகுதியில் மழை இல்லாத காலத்தில் கூட இந்த கடம்பன்குளம் நிரம்பியது உண்டு.
கீழப்பாவூர் பெரிய குளம், நாகல்குளம் பெருகிய நிலையில் கடம்பன்குளமும் பெருகி விடும். தற்போது இக்குளத்திற்கு வரக்கூடிய தண்ணீர் வரத்து பாதையை பலர் ஆக்கிரமித்துள்ளதாலும், போதிய பராமரிப்பு இல்லாததாலும் தண்ணீர் வர வழியின்றி உள்ளது என்று விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
கடம்பன்குளம் நிரம்பினால் அடைக்கலப்பட்டணம் ஆலங்குளம் கால்வாய் வழியாக சென்று பூலாங்குளம், ஆண்டிப்பட்டி, கரும்பனூர், காளத்திமடம் வழியாக ஆலங்குளம் தொட்டியான்குளம் போய் தண்ணீர் சேரும். ஆனால் கடம்பன்குளத்திற்கு தண்ணீர் வராததால் கிட்டத்தட்ட 50 கிராம மக்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுளளது. எனவே இக்குளத்திற்கு தண்ணீர் வரும் கால்வாயை தூர்வார அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
