குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற அழைப்பு

 

பள்ளிப்பட்டு, ஜூன் 23: ஆர்.கே.பேட்டை வட்டாரத்தில் தற்பொழுது குறுவை நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ள நிலையில் 590 ஏக்கர் பரப்பில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக வேளாண் உதவி இயக்குனர் அபிநயா (பொறுப்பு) தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குறுவை பருவத்தில் இயந்திரம் மூலம் நடவு மற்றும் நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகளுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் பின்னேற்பு மானியமாக அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு இரண்டு ஏக்கர் என்ற அளவில் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு மேற்கொள்ளலாம். மேலும் இ-சேவை மையத்தில் அல்லது விவசாயிகள் தாங்களாக Agrisnet என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பத்துடன் சிட்டா, அடங்கல், ஆதார், வங்கி புத்தக முன் நகல், இயந்திர நடவு ரசீது, நேரடி நெல் விதைப்புக்கு நிலம் சம்பந்தப்பட்ட விதைப்புக்கான ரசீது, புவியிட குறியீட்டுடன் புகைப்படம் போன்ற ஆவணங்களுடன் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக, 5 ஏக்கருக்கு தேவையான வேளாண் இடுபொருட்களான நெல் நுண்ணூட்ட கலவை உரம், திரவ உயிர் உரங்கள் போன்றவை 50 சதவீத மானியத்திலும், 10 வருடங்களுக்குள் உள்ள புதிய நெல் ரகங்களுக்கு ஒரு கிலோ விதைக்கு ரூ.20 மானியத்திலும், 10 வருடங்களுக்கு மேலான பழைய நெல் ரகங்களுக்கு ஒரு கிலோ விதைக்கு ரூ.10 மானியத்திலும் ஆர்.கே.பேட்டை வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் சின்ன நாகபூண்டி துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் இடுபொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் இதனை வாங்கி பயனடையலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: