முழு பயிர்க்கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்

 

ஊத்துக்கோட்டை, ஜூன் 23: தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் முழு பயிர்க்கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக முதல்வர் விஜய் விவசாயிகளுக்கு அளித்த உத்தரவாதமான கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்ற கோரிக்கையை நிறைவேற்றக்கோரி ஜூன் 22ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் விவசாயிகள் அனைவரும் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர்.

அதன்படி பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் விவசாயிகள் சங்க சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் தேவராஜ் தலைமையில் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை பகுதியில் ஊர்வலமாக சென்று நான்கு முனை சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் ஊர்வலமாக சென்று காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தனர். அதை தொடர்ந்து தொடர் காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ரவி, விவசாய போராளி அரிகிருஷ்ணன், மாவட்ட நீர்வள பாதுகாவலர் ரவிராவ், சுற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளர் ஜெகவீரன், பாதுகாப்பு சங்க தலைவர் விநாயகம், கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ரமேஷ்பாபு, இயற்கை விவசாயி சீனிவாசன், பனை பாதுகாப்பு சங்க தலைவர் ரமேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பிறந்த நாள் காணும் முதல்வர் விஜய் முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடியை அறிவிக்காவிட்டால் அடுத்த மாதம் (ஜூலை) 7ம் தேதி கோட்டையை நோக்கி பேரணியாக சென்று முற்றுகையிடுவோம் என மண்டல ஒருங்கிணைப்பாளர் தேவராஜ் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தால் தாமரைப்பாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Related Stories: