நியூயார்க்: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 2018ல் தொடங்கப்பட்ட கிரெட் நிறுவனம்.இந்தியாவின் கிரெடிட் கார்டு கட்டணச் செலுத்துதலில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் தற்போது கிரெட் வழியாக கட்டணம் செலுத்தி வருகிறார்கள். இதனால் அந்த நிறுவனத்தின் பணப்பறிமாற்றம் ரூ. 24,000 கோடியை எட்டியுள்ளது. இந்த வகையில் கிரெட் நிறுவனம் சுமார் ரூ. 3,200 கோடி வருவாயைப் பதிவு செய்துள்ளது. கிரெட் நிறுவனத்தின் தலைவராக மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த குணால் ஷா உள்ளார். அவரை தற்போது மெட்டா நிறுவனம் தனது வாட்ஸ்அப் அமைப்பின் உலகளாவிய தலைமை பொறுப்புக்கு தேர்வு செய்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக வாட்ஸ்அப் தளத்தை வழிநடத்தி வந்த வில் கேத்கார்ட்டுக்கு பதிலாக, குணால் ஷா வாட்ஸ்அப்பின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தம் அடிப்படையில் மெட்டா நிறுவனம் கிரெட் நிறுவனத்தில் சுமார் 20 சதவீத பங்குகளை வாங்கும். அதாவது ரூ.43,239 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதனால் குணால் ஷா, கிரெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து விலகி, மெட்டா நிறுவனத்தின் உலகளாவிய தலைமைத்துவக் குழுவில் இணைவார். விளம்பரம் மற்றும் சந்தா சார்ந்த தயாரிப்புகள் மூலம் வருவாயை அதிகரிப்பது மற்றும் தளத்தில் ஏஐ ஏஜெண்டுகளை ஒருங்கிணைப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்தி, வாட்ஸ்அப்பை அதன் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும் பொறுப்பை குணால் ஷா ஏற்பார். கிரெட் நிறுவனத்தின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாக மித்தன் சம்பத், உடனடியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
