மணிலா: பிலிப்பின்ஸில் பள்ளியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 மாணவர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய பிலிப்பைன்ஸில் உள்ள அரசு நடத்தும் உயர்நிலைப் பள்ளியில் இன்று இருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 3 மாணவர்கள் கொல்லப்பட்டனர். ஐந்து பேர் காயமடைந்தனர் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் சம்பவம் நடந்த உயர்நிலைப் பள்ளியின் மாணவர் ஒருவர் உட்பட, இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
இதனையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் 9 மி.மீ. கைத்துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பள்ளியில் 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து, பாதுகாப்பை பலப்படுத்த அப்பகுதியில் கூடுதல் போலீஸ் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.
