தண்டையார்பேட்டையில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் தீவிபத்து: ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்

 

தண்டையார்பேட்டை, ஜூன் 23: தண்டையார்பேட்டையில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் பெட்ரோல் கழிவு பொருட்கள் திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சேமிப்புக் கிடங்கு உள்ளது. இந்த நிறுவனத்தில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். நிறுவனத்தின் உள்ளே சேமித்து வைக்கப்பட்டுள்ள பெட்ரோல் கழிவு நேற்று திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

மளமளவென பற்றி எரிந்த தீ, அருகே இருந்த குப்பை கழிவு குடோன்களில் பரவியது. அதிலிருந்து கழிவுகள் எரிந்து கரும்புகை வெளியேறி, தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பால சாலை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளை சூழ்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பொது மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டது. தகவலறிந்து தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள், விரைந்து செயல்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து தண்டையார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

 

Related Stories: