ஊருக்குள் நுழைந்த மக்னா யானை: மக்கள் பீதி

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே ஊருக்குள் நுழைந்த மக்னா யானையால் கிராம மக்கள் அச்சமடைந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இரவு நேரத்தில் வனத்தில் இருந்து வெளியேறும் யானைகள் அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம், உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது.

இந்த நிலையில் பவானிசாகர் அருகே உள்ள விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து நேற்றிரவு வெளியேறிய மக்னா யானை சத்தியமங்கலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையை கடந்து உக்கரம் வழியாக வண்டிபாளையம் கிராமத்திற்கு சென்றது. இரவு முழுவதும் விளாமுண்டி வனத்துறையினர் மக்னா யானை நடமாட்டத்தை கண்காணித்த நிலையில், யானை வனத்துறையினர் கண்களில் சிக்காமல் போக்கு காட்டியது.

இதற்கிடையே இன்று காலை வண்டிபாளையம் கிராமத்தில் உள்ள விவசாய தோட்டங்களில் நடமாடிய யானை அங்கிருந்து அருகே உள்ள காவிலிபாளையம் குளத்திற்கு சென்றது. 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட காவிலிபாளையம் குளத்தில் உள்ள முட்புதர் காட்டில் யானை முகாமிட்டுள்ளது. அங்கு வனத்துறை ஊழியர்கள் முகாமிட்டு யானை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். யானை குளத்தில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் யானை நடமாடும் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர். இன்று மாலை யானையை அங்கிருந்து வனப்பகுதிக்கு விரட்ட திட்டமிட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். மக்னா யானை ஊருக்குள் நுழைந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: