அரவக்குறிச்சி: சின்ன தாராபுரத்தில் கட்டிய சில நாட்களிலேயே பேருந்து நிழற்குடையின் கைப்பிடி, படிகள் உடைந்ததால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியின் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு இடங்களில் பேருந்து நிழற்குடைகள் கட்டப்பட்டு வருகின்றன.அந்த வகையில், அரவக்குறிச்சி அருகே உள்ள சின்னதாராபுரம் பகுதியில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பேருந்து நிழற்குடை, தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கட்டப்பட்டு சில நாட்களே ஆன நிலையில், பேருந்து நிழற்குடையின் கைப்பிடி மற்றும் படிகள் உடைந்து சேதமடைந்துள்ளன. இதனால் அங்கு பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள், குறிப்பாக முதியவர்கள், பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் நிற்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. உடைந்த கைப்பிடி மற்றும் படிகள் காரணமாக பேருந்தில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், எப்போது வேண்டுமானாலும் விபத்து நேரிடும் அபாயம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.மேலும், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் வழுக்கி கீழே விழும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட பேருந்து நிழற்குடை, பயன்பாட்டிற்கு ஒத்துவராத நிலையில் இருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக, அப்பகுதி மக்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.தரமற்ற முறையில் கட்டப்பட்ட பேருந்து நிழற்குடையை உடனடியாக சீரமைத்து, உறுதியான கட்டுமானத்துடன் மீண்டும் அமைத்து, எந்தவித அச்சமும் இல்லாமல் பொதுமக்கள் பேருந்தில் ஏறி இறங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பொது நிதியில் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகள் தரத்துடன், நீடித்த பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
