வலங்கைமான்: ஜூன், ஜூலை மாதங்களில் சூடு பிடிக்கும் செங்கல் உற்பத்தி மழை காரணமாக தொழில் முடங்கியது. இதனால் வலங்கைமான் பகுதியில் 5 ஆயிரம் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் நெல், எள், பருத்தி உள்ளிட்ட வேளாண்மை பணிகளோடு வேளாண்மை சார்ந்த தொழில்களான மீன் வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு உள்ளிட்டவைகளில் அதிக அளவில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வேளாண்மையோடு சின்ன சிவகாசி என அழைக்கப்படும் அளவிற்கு பட்டாசு உற்பத்தியும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.மேலும் வலங்கைமானுக்கு பெருமை சேர்க்கும் விதமாக செங்கல் உற்பத்தி கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக குடமுருட்டி ஆற்றுக்கும், சுள்ளன் ஆற்றுக்கும் இடையே உள்ள நல்லூர், இனாம் கிளியூர், கோவிந்தகுடி அணியமங்கலம், சந்திரசேகரபுரம், லாயம் பூண்டி, ஆதிச்ச மங்கலம், விருப்பாச்சிபுரம், வலங்கைமான், மேல விடையல், கீழ விடையல், கருப்பூர், சித்தன்வாலூர், தொழுவூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் செங்கல் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் செங்கற்கள் நல்ல நிறத்துடனும், வலுவாகவும் காணப்படுவதால் கட்டுமான பணிகளில் வலங்கைமான் செங்கலுக்கு தனி முத்திரை பதித்து வருகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் செங்கற்கள் நீடாமங்கலம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் அதிராம்பட்டினம் உள்ளிட்ட ஒருங்கிணைந்த தஞ்சை, திருவாரூர், நாகை, மாயவரம் மாவட்டங்களில் அதிக அளவில் அரசு மற்றும் தனியார் கட்டுமான பணிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் செங்கற்களை கொண்டு செல்வதற்கான நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் டிராக்டர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. செங்கல் உற்பத்தி ஜனவரி மாதத்தில் துவங்குவது வழக்கம் .இருப்பினும் நெல் அறுவடைக்குப் பிறகு மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் அதிக அளவில் செங்கல் உற்பத்தி நடைபெறுகிறது செங்கல் உற்பத்தியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5000 மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கமாக ஜனவரி மாதத்தில் துவங்கிய செங்கல் உற்பத்தி கடந்த சில தினங்களாக நல்ல வெப்பம் நிலவி வந்த நிலையில் செங்கல் உற்பத்தி தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில் நேற்று முன் தினம் வலங்கைமான் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக செங்கல் உற்பத்தி தற்போது முடங்கியது. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக முன்னதாக தயார் செய்யப்பட்ட கல் மழையில் நனையாமல் இருப்பதற்காக பிளாஸ்டிக் காகிதம் கொண்டு மூடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
