ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள காடுகளில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தக்கூடிய வால் குரட்டை பழங்கள் அதிகளவு விளைந்துள்ளன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனங்களில் பல்வேறு சிறு பழ வகைகள் உள்ளன. குறிப்பாக நாவல் பழம், தவிட்டுப்பழம், பிக்கி பழம், ஸ்ட்ராபெரி மற்றும் தாட் பூட் பழம் எனப்படும் வால் குரட்டை வகை பழங்கள் அதிகளவு காணப்படுகின்றன. இவைகளை விலங்குகள் மட்டுமின்றி பொதுமக்கள் விரும்பி உண்கின்றனர். இவைகளில் ஒரு சில பழங்கள் மருத்துவ குணநலன்களை கொண்டதாக உள்ளது. வால் குரட்டை பழங்கள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் குணம் கொண்டதாக கூறப்படுகிறது. தற்போது நீலகிரி காடுகளில் இந்த பழங்கள் அதிகம் காணப்படுகிறது.
குறிப்பாக, ஊட்டி அருகேயுள்ள தொட்டபெட்டா காடுகளில் மரங்களில் படர்ந்து செல்லும் வால் குரட்டை கொடிகளில் இருந்து மஞ்சள் நிறத்தில் கிடைக்கும் வால் குரட்டை பழங்கள் அதிகளவு காணப்படுகிறது. இதன் கொடிகள் கற்பூர மரங்கள்,காட்டு மரங்கள் என அனைத்து மரங்களிலும் வளர்ந்து பரவி விடுவதால், இவைகளில் விளையும் பழங்களை விலங்குகள் மற்றும் பறவைகள் விரும்பி உண்ணுகின்றன. தற்போது விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு அதிகம் கிடைக்கும் இயற்கை உணவு இந்த பழ வகைகளே.
மேலும், மருத்துவ குணம் கொண்ட இந்த பழங்கள் குறித்து ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனங்களில் மருத்துவ குணம் கொண்ட பல வகையான பழங்கள் கிடைக்கிறது.இதில், வால் குரட்டை பழமும் ஒன்று. இந்த பழங்கள் ஊட்டியில் உள்ள சோலை காடுகளில் அதிகளவு காணப்படுகிறது.ஆனால், பொதுமக்களுக்கு இந்த பழங்கள் குறித்து விழிப்புணர்வு இல்லை.
கோவா, தாட் பூட் என்றழைக்கப்படும் வால் குரட்டை பழங்களில் பல்வேறு சக்தியும், மருத்துவ குணமும் உள்ளது. இதில், வைட்டமின் ‘ஏ’ மற்றும் ‘சி’ சத்து ஆகியவை அதிகளவு உள்ளது. மேலும், இந்த பழங்கள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தக்கூடியவை. இந்த பழங்கள் குறித்து விவரம் அறிந்தவர்கள், இவைகளை பறித்து உட்கொள்வது மட்டுமின்றி, விற்பனையும் செய்கின்றனர், என்றனர்.
