விஜய் தலைமையிலான அரசில் அங்கம் வகிப்பதால் திமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிக்க இயலாது: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அறிவிப்பு

சென்னை: விஜய் தலைமையிலான அரசில் அங்கம் வகிப்பதால், இன்றுள்ள அரசியல் சூழலில் திமுக கூட்டணியில் பயணிக்க இயலாது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அறிவித்துள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டம் சென்னை ராயபுரத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முகமது அபூபக்கர் வரவேற்றார்.

கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் ஏ.எம்.ஷாஜஹான், எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் பாஷா ஆகிய வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்த வாக்காளர்களுக்கும், இருவரின் வெற்றிக்காக ஒத்துழைப்பு அளித்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சியினருக்கும் இதயம் நிறைந்த நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் முடிவுக்குப் பிறகு, தவெக 108 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மை கட்சியாக வந்தபோதும், ஆட்சி அமைக்க தேவையான எண்ணிக்கையை பெறாத நிலையில், தமிழ்நாட்டில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு விடுமோ என்ற அச்சம் உருவானது.

இதனால் தவெக ஆட்சி அமைய இ.யூ.முஸ்லிம் லீகின் 2 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தனர். தொடர்ந்து விஜய் தலைமையிலான அரசில், இடம்பெற வேண்டும் என த.வெ.க. சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன் பிறகு விஜய் தலைமையிலான அரசில் அங்கம் வகிப்பது, ஓர் அமைச்சர் பதவி கொடுப்பதாக கூறியதால் பாபநாசம் எம்எல்ஏ ஏ.எம்.ஷாஜஹானின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. அமைச்சராக அவர் பொறுப்பு ஏற்றார்.

சட்டமன்ற தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து தவெக ஆட்சி அமைய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு அளித்தது. விஜய் தலைமையிலான அரசில் அங்கம் வகித்து வருகிறது. இன்றுள்ள அரசியல் சூழலில் திமுக கூட்டணியில் நாம் தொடர்ந்து பயணிக்க இயலாது. இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் உள்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

‘வாடகை சோபா வாங்குனோம் வேற எந்த சோபாவும் தெரியாது’

காதர் மொகிதீன் அளித்த பேட்டியில், ‘‘எங்கள் முஸ்லிம் லீக் அலுவலகத்திற்கு இதுவரை எந்த முதல்வரும் வந்தது இல்லை. தவெகவிற்கு நாங்கள் ஆதரவு கொடுத்த பிறகு, முதல்வர் விஜய், எல்லா கட்சி ஆபீசுக்கும் போய் வந்த மாதிரி எங்க ஆபீசுக்கும் வர்றேன்னு சொன்னாரு. நான் வேண்டாம் என்று சொன்னேன். இந்த தெரு ரொம்ப சிக்கலான தெரு. உங்க அலுவலகத்திற்கு வந்து நான் நன்றி சொல்லிக்கிறேன்னு சொன்னேன். இல்ல சார், நீங்க சொல்ற நன்றியை உங்க ஆபீஸ்ல நாங்க வாங்கிக்கிறோம்னு சொல்லிவிட்டார். பலமுறை சொன்னேன். இல்ல எல்லா அலுவலகத்திற்கும் நாங்கள் போனோம். உங்க அலுவலகத்திற்கும் வந்தா தானே நல்லா இருக்கும் அப்படின்னு சொன்னார். அப்படி வந்துட்டாரு. இவர் வந்ததால் எங்க அலுவலகத்தை அலங்காரம் பண்றதுக்காக, சினிமாவில் பண்ற மாதிரி ஒரு இரவோடு இரவாக வெள்ளையடித்தோம். நீங்க சோபா என்று கேட்டீங்க பாருங்க. அது வந்து.. வாடகை சோபா வாங்கி போட்டோம். ஏழு, எட்டு சோபா போட்டு, அவர் வந்தவுடனே உட்கார வைக்க வேண்டும் என்று நினைத்தோம். அது தான் நாங்க பண்ணுனதே தவிர, வேற சோபா பத்தியெல்லாம் எங்களுக்கு ஒன்னும் தெரியாது’’ என்றார்.

Related Stories: