இந்த மாதிரி மாற்றத்தை யாரும் விரும்பவில்லை; தவெக ஆட்சியில் அரசு பள்ளிகளில் நடக்கும் அவலங்கள் : பிரேமலதா குற்றச்சாட்டு

சென்னை: மாற்றத்தை தருவோம், மாற்றத்தை தருவோம் என்று கூறி இதுபோன்ற மாற்றத்தை யாரும் விரும்பவில்லை, ஆளும் தவெக ஆட்சியில் அரசு பள்ளிகளில் நடக்கும் அவலங்கள் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
உத்திரமேரூர் அருகே உள்ள அரசுப் பள்ளியின் வகுப்பறைக்குள் பாடம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரங்களில், மாணவர்களிடம் முதல்வர் விஜய் புகைப்படத்தைக் காட்டி அவரின் பெயரைக் கேட்பது, மாணவர்கள் விஜய் என்று கூறுவது அதற்கு தவெக நிர்வாகிகள் அவர் எங்களுக்கெல்லாம் அண்ணன் உங்களுக்கு அவர் மாமா என்று கூறுவது மற்றும் பெரும் தலைவர்கள் புகைப்படம் எங்கு உள்ளது. அங்கே அவர் புகைப்படத்தை வைக்கப்போகிறோம் என்று கூறி புகைப்படத்தை வைப்பதும் மற்றொரு பள்ளியில் தவெக கட்சி நிர்வாகிகள் ஆய்வு செய்வதாகச் சென்று அதில் நிர்வாகி ஒருவர் அவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியதாக தகவல்கள் வெளியாகி மக்களிடையே பெரும் அதிருப்தியும் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமூக நலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி அரசு பள்ளி மாணவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டபோது, மாணவர்கள் தவெக என முழக்கமிட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகியுள்ளது. பள்ளிகள் கல்வி கற்கும் புனிதமான இடங்களாகும், அங்கு அரசியல் சார்ந்த முழக்கங்கள் எழுப்பப்படுவது கல்வி நிலையங்களின் நடுநிலைத்தன்மையையும் மாணவர்களின் சுதந்திரமான கல்விச் சூழலையும் பாதிக்கும் செயலாகும்.

மாணவர்களை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தும் எந்த முயற்சியும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மாற்றத்தை தருவோம், மாற்றத்தை தருவோம் என்று கூறி, இதுபோன்ற மாற்றத்தை யாரும் விரும்பவில்லை. மக்கள் ஆக்கப்பூர்வமான மற்றும் முன்னேற்றமான மாற்றங்களையே எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு பிரேமலதா கூறியுள்ளார்.

Related Stories: