சத்ரபதி சம்பாஜி நகர்: மகாராஷ்டிராவில் உள்ள அனுமன் கோயிலில் மண்டப கூரை இடிந்து விழுந்த சம்பவத்தில் 5 பக்தர்கள் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் பர்பானி மாவட்டத்தில் உள்ள யாஷ்வாடி கிராமத்தில் அனுமன் கோயில் ஒன்றில் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இந்தக் கோயில் சத்ரபதி சம்பாஜி நகரில் இருந்து கிட்டத்தட்ட 190 கிமீட்டர் தூரத்தில் பர்பானி-மன்வாட் சாலையில் அமைந்துள்ளது. கோயிலில் கட்டுமானப் பணி ஒருபுறம் நடந்துவந்தாலும், சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் சனிக்கிழமை என்பது அனுமன் வழிபாட்டிற்கு உகந்த நாள் என்பதால், நேற்று கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பிற்பகல் 3.30 மணியளவிலி சபா மண்டபத்தின் கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் 20க்கும் மேற்பட்ட பக்தர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதுபற்றி அங்கிருந்தவர்கள் மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்பு படையினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதில் 5 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததால், அவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்கள் சந்தோஷ் கடடே (மந்தா), ஆகாஷ் சுர்துசே (பர்பானி), முனேஷ் அகர்வால் (26, ஜின்டூர்), சூரஜ் போபட்கர் (20, மன்வாட்) மற்றும் ஸ்ரீகிருஷ்ணா கவாரே (38, வத்வானி-பீட்) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பக்தர்களின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் பட்நவிஸ், அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
