நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் நீட் மறுதேர்வு மையம்: ஒன்றிய அரசுக்கு ராகுல் கடும் கண்டனம்

புதுடெல்லி: நாடு முழுவதும் இன்று நீட் யூஜி மறு தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவின் நாக்பூரை சேர்ந்த நீட் யூஜி தேர்வு எழுதும் ஒருவருக்கு அபுதாபியில் உள்ள ஒரு பள்ளி தேர்வு மையமாக ஒதுக்கப்பட்டுள்ளாக குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்த குறைபாடு சரிசெய்யப்பட்டு அடுத்த சில மணி நேரங்களில் நாக்பூரிலேயே தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘நாக்பூரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் ஒரு மாதமாக நீட் மறுதேர்வுக்கு தயாராகி வந்தார். தேர்வுக்கு முந்தைய நாள் தான் அவர் தனது நுழைவு சீட்டைப் பதிவிறக்கம் செய்தார். அவருக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையம் அபுதாபியில் இருந்தது. அவரிடம் பாஸ்போர்ட் இல்லை. அவர் வெளிநாட்டுக்கு அனுப்பும் அளவுக்கு அவரது குடும்பத்தினரிடம் நிதி வசதியும் இல்லை. அவர் இரவு முழுவதும் அழுதார். இப்போது தேர்வை எழுதுவதற்கு மறுக்கிறார்.

இதில் உள்ள மன அழுத்தத்தின் அளவை யாராவது கற்பனை செய்து பார்க்க முடியுமா? இது எப்படி நடந்தது? எந்தவொரு மாணவரும் தங்கள் தேர்வு மையத்தை அடைய முடியாத சிக்கலை எதிர்கொள்ள நேரிடக்கூடாது . உண்மையில் தேசிய தேர்வு முகமை நாட்டின் மாணவர்களையும் அவர்களின் பெற்றோரின் பொறுமையையும் சோதித்து வருகின்றது. ஒரு மாணவருக்கு அவர் வசிக்கும் நகரத்திலேயே தேர்வு மையத்தை வழங்க முடியாத, மாறாக வெளிநாட்டில் மையத்தை ஒதுக்கும் ஒரு அமைப்புக்கு தேர்வுகளை நடத்துவதற்கான உரிமையே இல்லை ” என்று குறிப்பிட்டுள்ளார்.

மாணவரே அபுதாபியை தேர்வு செய்தார்
நாக்பூரை சேர்ந்த மாணவருக்கான நீட் மறுதேர்வு மையம் அபுதாபியில் ஒதுக்கப்பட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. மாணவர் நாக்பூர், வர்தா மற்றும் பண்டாரா ஆகிய மையங்களுக்கு முன்னுரிமை அளிந்திருந்ததாகவும் ஆனால் அபுதாபியில் மையம் ஒதுக்கப்பட்டு இருந்ததாகவும் அவரது தந்தை கூறியிருந்தார். இந்நிலையில், அப்துல்லா தாலிப் என்ற அந்த மாணவர் தேர்வு மையத்தை அபுதாபிக்கு மாற்றியிருந்ததாக தேசிய தேர்வு முகமை குறிப்பிட்டுள்ளது. தேசிய தேர்வு முகமையிடம் மாணவர் புகார் அளித்த நிலையில் நேற்று அந்த மாணவருக்கு நாக்பூர் மறுதேர்வுக்கான மையமாக ஒதுக்கி புதிய அனுமதி அட்டையை தேசிய தேர்வு முகமை வழங்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

‘நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்’
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நீட் மறுதேர்வு எழுதும் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில்,‘‘உங்கள் தேர்வு மிக சிறப்பாகவும் அமைய வேண்டும் என்றும் நீங்கள் அனைவரும் மிகச் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன். நினைவில் கொள்ளுங்கள், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். உங்களை பராமரிக்கவும், பாதுகாக்கவும், உங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதை உறுதி செய்யவும் நாங்கள் விரும்புகிறோம். பிரதமர் மோடி மற்றும் அரசிடம் நான் கேட்டுக்கொள்வது இது தான். தயவுசெய்து தயவுசெய்து தயவுசெய்து இந்த முறை எந்தவிதக் குறைபாடுகளும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள். மாணவர்கள் போதுமான மன அழுத்தத்தை அனுபவித்துவிட்டனர். அவர்களால் மீண்டும் அதனை தாங்கிக்கொள்ளமுடியாது” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: