பரபானி:மகாராஷ்டிர மாநிலம் பரபானி மாவட்டத்தில் இன்று பிற்பகலில் ஒரு பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. அங்குள்ள யஷ்வாடி பகுதியில் அமைந்துள்ள அனுமன் கோவிலின் மண்டப கூரை திடீரென பக்தர்கள் மீது இடிந்து விழுந்தது. கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த கொடூர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 25 முதல் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து அனுமன் கோவில் வளாகத்தின் முன்புறம் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு சபா மண்டபத்தில் நடந்துள்ளது. இந்த மண்டபத்தின் கூரை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதற்காக மூங்கில் மற்றும் இரும்பு கம்பிகளால் தற்காலிக முட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், அந்த அமைப்புகள் திடீரென சரிந்து, அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது விழுந்தத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு இதுவரை 7 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்களில் 15 முதல் 20 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
