புதுடெல்லி: இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வீரியமிக்க மருந்துகள் குறிப்பிட்ட அளவில் கலக்கப்பட்டு மாத்திரையாகவோ, கிரீம்களாகவோ, காப்ஸ்யூலாகவோ தயாரிக்கப்படுவது கூட்டு மருந்து எனப்படுகிறது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலைத் தொடர்ந்து, கூட்டு மருந்துகள் மீது ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு ஆய்வு நடத்தியது. இதன் அடிப்படையில், 16 கூட்டு மருந்துகளுக்கு ஒன்றிய சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது.
இது, பயனுள்ள மற்றும் அறிவியல் பூர்வமாக சரிபார்க்கப்பட்ட மருந்துகள் மட்டுமே பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை என அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த 16 கூட்டு மருந்துகள் சிகிச்சைக்கான நியாயப்படுத்துதலை கொண்டிருக்கவில்லை என்பதாலும், அவற்றில் உள்ள அபாயங்களை கருத்தில் கொண்டும் அவற்றின் உற்பத்தி, விற்பனை, விநியோகம் மற்றும் வழங்கல் ஆகியவை நாடு முழுவதும் உடனடியாக தடை செய்யப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட 16 கூட்டு மருந்துகளில் ஆன்டிபயாடிக் மற்றும் பாக்டீரியா தொற்றுக்கான மருந்துகள், வயிற்று வலி மற்றும் வலி நிவாரண மருந்துகள், சர்க்கரை நோய் மற்றும் இதர மருந்துகள், தோல் பராமரிப்பு மற்றும் அழகுசாதன லோசன்கள் ஆகியவை அடங்கும்.
