தலைமை செயலகத்திற்கு மனு கொடுக்க வந்த திருநங்கைகள் தடுத்து நிறுத்தம்: இது சமூக நீதி அரசாக எங்களுக்கு தெரியவில்லை என ஆதங்கம்

 

சென்னை: தலைமை செயலகத்திற்கு மனு கொடுக்க வந்த திருநங்கைகள் தடுத்து நிறுத்தியதால் அவர்கள் போர் நினைவுச் சின்னம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். திருநங்கைகள் தங்களது அடிப்படை வசதிகள் குறித்து தலைமை செயலகத்திற்கு மனு கொடுக்க வந்த சுமார் 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் போலீஸ் அனுமதிக்காமல் போர் நினைவுச் சின்னம் அருகே தடுத்து நிறுத்தியதால் அவர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்ய முடியாமல் திணறிய போலீசார், பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை போர் நினைவுச் சின்னம் அருகே சுற்றுலாத்துறை மைதானத்தில் உள்ளே காத்திருக்க வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும் 4 பேர் முதல்வரைச் சந்திக்க ஏற்பாடு செய்வதாக காவல்துறையினர் சமாதானம் செய்தனர். இதற்கிடையில் நிருபர்களிடம் பேசிய திருநங்கைகள்: முதல்வரை அல்லது அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்க தலைமை செயலகத்திற்கு வந்தோம், ஆனால் போலீசார் எந்த காரணமும் சொல்லாமல் எங்களை தடுத்து நிறுத்தினர். இந்த மனுவில் திருநங்கைகள் உடைய அனைத்து கோரிக்கைகளும் உள்ளன. தற்போதைய சமூகத்தில் திருநங்கைகள் முன்னேற்றத்திற்காக அத்தியாவசிய அனைத்து கோரிக்கைகளும் உள்ளன.

மனு கொடுக்க வந்த எங்களை தடுப்பது சமூக நீதி இல்லை, இது அநீதி. சமூக நீதி அரசாக எங்களுக்கு இது தெரியவில்லை. எல்லாருக்குமான அரசு என்று சொல்லிவிட்டு எங்களை வஞ்சிக்கிறது, சித்திரவதை செய்வது நியாயமா? மேலும் ஒரு திருநங்கை மொத்த திருநங்கை சமூகத்தை இழிவு செய்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை மனுவில் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories: