சிதம்பரம்: விசிக தலைவர் திருமாவளவன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக கடலூர் மாவட்டம் சிதம்பரத்துக்கு வருகை தந்தார். முன்னதாக அவர் அளித்த பேட்டி: ஹைட்ரோ கார்பன் திட்டம் பரங்கிப்பேட்டை பகுதிக்கு வந்தால் பாதிப்பு அதிகமாகும். தமிழ்நாட்டில் விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பில் விவசாயிகள் திருப்தி அடையவில்லை. அவர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக கட்டுக்கோப்பாக இருக்க வேண்டுமென கடந்த சில ஆண்டுகளாகவே நான் சொல்லி இருக்கிறேன்.
திராவிட அரசியல் இங்கே நீர்த்துப்போக வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கும் பாஜகவுக்கு இடம் கொடுத்து விடக்கூடாது. தமிழ்நாட்டில் திராவிட இனத்தையே நீர்த்துப் போக்க வைப்பதுதான் பாஜக ஆர்எஸ்எஸ் விருப்பம். அதற்கு இடம் கொடுத்து விட்டோமோ? என்ற சூழல் இங்கே உருவாகி இருக்கிறது. அதிமுக பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. ஆனால் நெருக்கடிகளை தவெகதான் செய்கிறது என கூறப்பட்டது. அவர்களை கேட்டால், நாங்கள் அவற்றை செய்யவில்லை என தெரிவித்து வருகின்றனர். திமுக, அதிமுக பலவீனப்படுவதால் திருமாவளவனுக்கு என்ன கவலை என்று கேட்கலாம். நான் எந்த தடுமாற்றத்தோடும் இல்லை.
அண்ணாமலையை, பாஜக அரசில் இருந்து தயாரித்து அனுப்பப்பட்ட நிகழ்வாகத்தான் பார்க்க முடிகிறது. தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு பிரச்னைகளுக்கு முடிவு காண முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம். தமிழகத்தில் குழந்தை பாலியல் வன்கொடுமைகள் நடப்பதை தடுப்பதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர், இவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி குழந்தைகள், பெண்கள், சிறுமிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
