அரசு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் – விவசாயிகள் வேதனை

செங்கல்பட்டு அருகே மழை காரணமாகவும், அரசு அதிகாரிகளின் அலட்சியம் காரணமாகவும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியது. குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டம் வில்லியம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சாஸ்திரம்பாக்கம் பகுதியில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. அரசின் இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சாஸ்திரம்பாக்கம், வடகால் மற்றும் இதனை சுற்றியுள்ள கிராமப்புறத்தில் இருக்கும் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த நெல்மணிகளை அறுவடை செய்து இந்த நெல்கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

இதனை தொடர்ந்து விவசாயிகளிடம் இருந்து தமிழக அரசு நெல்கொள்முதல் செய்திருக்கும் நிலையில், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் திறந்த வெளியிலேயே வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக இந்த நெல் மூட்டைகள் நீரில் நனைந்து வீணாகி வருகிறது.

விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படாதது விவசாயிகளிடையே கவலை, வேதனை மற்றும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக நெல் மூட்டைகள் அனைத்தும் நனைந்து சேதமடைந்து வருகிறது. குறிப்பாக இன்று பெய்த மழையில் பல நெல்மூட்டைகளுக்குள் மழைநீர் புகுந்து நெல் சேதமானது, மேலும் சில மூட்டைகளில் இருந்த நெல்மணிகள் முளைத்து காணப்பட்டன.

விவசாயிகளின் பல மாத உழைப்பின் பலனாக விளைந்த நெல் மூட்டைகள், இப்படி மழையில் நனைந்து சேதமாவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மழை காரணமாக திறந்த வெளியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நெல் சேதமடைந்தால் அரசுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் நிலை உருவாகி உள்ளதாகவும், இதுபோன்ற பாதிப்புகளை தவிர்க்க எதிர்காலத்தில் நிரந்தர சேமிப்பு கிடங்குகள் அமைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: