சேலம், ஜூன் 15: சேலம் அருகே மாஜி காதலியை குடும்பம் நடத்த அழைத்த கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியை சேர்ந்தவர் குமார் மனைவி சத்யா (29, இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது). சத்யாவிற்கு கடந்த 10 ஆண்டுக்கு முன் ஆட்டையாம்பட்டி ஸ்டாலின் நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி லோகநாதன் (எ) பாஸ்கருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகி வந்தது, அவரது கணவரான குமாருக்கும், உறவினர்களுக்கும் தெரிந்துள்ளது. உடனே சத்யாவை கணவர் மற்றும் உறவினர்கள் கண்டித்துள்ளனர். பாஸ்கரையும் ஊர் பெரியவர்கள் கண்டித்து, தொடர்பை துண்டித்துள்ளனர்.
இதன் பின், சத்யாவை அழைத்துக்கொண்டு அவரது கணவர் குமார், ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி வலசுக்கு சென்றுள்ளார். அங்கு குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை பார்த்துள்ளார். சத்யாவும் தனியார் மருத்துவமனையில் உதவியாளராக வேலை பார்க்கிறார். இந்நிலையில், கடந்த 31ம் தேதி சத்யா, தனது மாமனார், மாமியாரை பார்க்க குடும்பத்துடன் வந்துள்ளார். வந்த இடத்தில், அவரது வீட்டிற்கு குடிபோதையில் பாஸ்கர் வந்துள்ளார். அவர் சத்யாவிடம், நீ என் கூட வந்து வாழ வேண்டும் என அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவும், தகராறில் ஈடுபட்டு கொன்று விடுவதாக, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதுபற்றி ஆட்டையாம்பட்டி போலீசில் சத்யா புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி, பெண்ணிடம் தவறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்த பாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து நேற்று, பாஸ்கரை (29) அதிரடியாக கைது செய்தனர். விசாரணைக்கு பின் அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைக்கவுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
