சேந்தமங்கலம், ஜூன் 18: கொல்லிமலையில், போதிய மழை இல்லாததால் மாசிலா அருவியில் தண்ணீர் வரத்து குறைந்தது.
நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை சிறந்த சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. தமிழக மட்டுமல்லாமல், அண்டை மாநிலமான ஆந்திரா கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்டப் பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவி, சந்தன பாறை அருவி, படகு இல்லம், தாவரவியல் பூங்கா காட்சி முனையம் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு தலங்களுக்கு சென்று வருகின்றனர். மூலிகை வனம் நிறைந்த பகுதிகளில் இருந்து தண்ணீர் வந்து அருவிகளில் கொட்டுவதால், கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த சில வாரங்களாகவே கொல்லிமலையில், போதிய மழை இல்லாததால் அருவிகளில் லேசாக தண்ணீர் கொட்டி வருகிறது. தற்போது, நம் அருவி உள்ள பகுதிகளில் போதிய மழை இல்லாததால், அருவி முழுவதும் தண்ணீரின்றி வறண்டுள்ளது.
